நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காணரமாக இடைநிறுத்தப்பட்டுள்ள தபால் நிலையங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் மற்றும் முதியோர் கொடுப்பனவு ஆகியவற்றை முன்னரைப் போன்று தபால் நிலையங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி முதல் தபால் நிலையங்களை சாதாரண முறையில் இயங்கும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மே மாதத்துக்கு உரிய பொதுமக்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள், மூத்தோருக்கான கொடுப்பனவு, விவசாயிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வூதியங்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்ணீர்க் கட்டணங்கள், மின்சாரக் கொடுப்பனவுகள், தொலைபேசி பட்டியல் கொடுப்பனவுகள், இலத்திரனியல் பணப் பரிமாற்றம், கடிதம் மற்றும் பொதிகள் பரிமாற்றம் ஆகிய நடவடிக்கைகளும் மே மாதம் 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இதேவேளை, தபால் நிலையங்களில் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வரும் பொதுமக்கள், சுகாதார அமைச்சு மற்றும் தபால் நிலையங்களினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றுமாறு தபால் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
0 Comments