மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இவ் அறிக்கையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்படுகின்றது.
நாட்டிலே தற்போது நிலவுகின்ற COVID 19 வைரஸ் பரவுகின்ற அபாயம் சம்பந்தமாக அரசாங்கம் தகுந்த உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக எடுக்க வேண்டும்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.
இவ்விடயத்தில் முற்றுமுழுதாக எமது பங்களிப்பினை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
மக்களுடைய பாதுகாப்பிற்கு அதியுச்ச கரிசனை வழங்கப்பட வேண்டும் என்பதாலும் இவ் அசாதாரண சூழ்நிலையில் ஜனநாயக நடவடிக்கைகளை முழுமையாக செயற்படுத்த முடியாத காரணத்தாலும் ஏப்ரல் 25ம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை பிற்போடுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலையை மதிப்பாய்வு செய்யும்வரை பொது விடுமுறையை ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த மதிப்பாய்வு நடவடிக்கைகள் முடியும் வரை மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க இந்த அறிவிப்பது விடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக கப்பல்கள் சேவைகளையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்குமாறும் ஜனாதிபதியிடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
அதேபோன்று, நாடுமுழுவதும் நீதிமன்ற நடவடிக்கைகளை இந்த வாரம் இடைநிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோரோனா அச்சநிலை காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுக்குமாறு சங்கம் கேட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாளைய தினம் பொது விடுமுறை வழங்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 comments: