கொரோனா தொற்று சோதனை நிலையத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஹர்த்தால் அனுஸ்டிக்கபட்டுள்ளது.
அந்நிய நாட்டு பிரஜைகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்ப்பு தெரிவித்தே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் மாவட்டத்தின் பல பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தககர்களும் இக் ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமது வியாபார நடவடிக்கைகளை முடக்கியுள்ளதாகவும், மாவட்டதிலுள்ள சில பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் இயங்குகின்ற போதிலும் மாணவர்கள் மற்றும் மக்களின் வரவு குறைவான நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தூர இடங்களுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் நடைபெறுகின்ற போதிலும் உள்ளூர் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சேவை பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலி, ஈரான், கொரியா நாட்டில் இருந்து வரும் கொரோனா தொற்று இருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படும் நபர்கள் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு கொண்டுவரப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு அவர்களில் கொரோனா அறிகுறிகள் தென்படுவோரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டு பிரஜைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஆனால் வெளிநாட்டவர்களை அழைத்து வந்து பராமரிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.
இந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் இந்த மாவட்டம் தனிப்படுத்தப்படும் நிலையேற்படும்.
இந்த அனர்த்தத்தில் இருந்து எமது மாவட்டத்தினை பாதுகாக்க வீட்டுக்குள் முடக்கி வீதிகளை வெறிச்சோட செய்து எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் என தமிழ் உணர்வாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments: