யாழ்.மாவட்டத்தில் கொரொனா வைரஸ் பரவாது என்பதுபோல் மக்கள் செயற்படுகிறாா்கள். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடுகிறாா்கள்.
அது மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண மருத்துவ அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் உள்ளவா்களுக்கு கொரோனா பரவாது என்பதுதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. பரவும் என்பதற்கு 100 வீத சாத்தியங்கள் உள்ளன. பரவினால் இத்தாலி எடுத்துள்ள முடிவைப் போல் பலரை காப்பாற்ற முடியாமல் போகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துக் கூறும் போதே இவ்வாறு கூறியுள்ளனர். இதுவரையில் யாழ்ப்பாணத்தில் எந்த நோயாளியும் இது வரை இனம் காணப்படவில்லை.
ஆனாலும் பலாலி விமான நிலையம் மூலம் எமது மண்ணிற்கு 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வந்திறங்கி பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார்கள். அவர்கள் எவருமே கண்காணிக்கப்படவில்லை. அவர்களின் வீட்டு விலாசங்கள், அவர்கள் தொடர்பான தகவல்களை யாழ்ப்பாணத்தில் உள்ள 14 சுகாதார மருத்துவ அதிகாரிகள் சேகரித்து அவர்களை கண்காணித்து அவர்களுக்கு கோரோனோ உள்ளதா? என பரிசோதிக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.
கொரொனோ தொற்றானது ஒரு நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றும். நோயாளியின் நீர் துளிகள் மூலமே அவை பரவுகின்றது. எனவே நாம் நோயில் இருந்து தப்புவதற்கு முதலில் செய்ய வேண்டியது, வெளியில் தேவையற்று நடமாடாமல்.
வீட்டிலேயே இருப்பதே சிறந்தது. அதற்காகவே அரசு விடுமுறையை விடுத்துள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தை பார்க்கும்போது நோய்க்காக அரசு விட்ட விடுமுறையை பொருள்கள் கொள்வனவு செய்வதற்காக விடுக்கப்பட்ட விடுமுறை போல பலரும் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதை விடினும் புடவைக்கடை , நகைக்கடை என்பவற்றிலும் மக்கள் கூட்டமாக கொள்வனவு செய்வதில் கவனமாக உள்ளார்கள்.
இந்த நோய் தொற்றில் இருந்து எம்மை பாதுகாக்க, முடிந்த வரையில் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்லாது தவிர்ப்பதே சிறந்தது. அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதாயின் வீட்டில் உள்ள ஒருவர் மாத்திரம் சென்று அவற்றை கொள்வனவு செய்யவும்.
திருமண வீடு , பிறந்தநாள் கொண்டாட்டம் என்பவற்றில் கலந்து கொள்வதனையும் தவிர்த்து கொள்வது சிறந்தது. நோய் தொற்று உள்ளதாக சந்தேகிப்போர் வீட்டில் தனிமைப்பட்டு இருங்கள் எனவும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
0 comments: