பாடசாலை மாணவர்களையும் இளைஞர் யுவதிகளையும் இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருள் உட்பட இன்னும் பல போதை மாத்திரைகளும் பானங்களும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் இந்த விடயத்தில் விழிப்பாயிருக்குமாறு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஊட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இடம் பெற்றுவரும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று வியாழக்கிழமை 23.01.2020 கருத்து தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி,
மேலும் கூறியதாவது....
ஏறாவூர் நகரிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் மாணவர்களையும், இள வயதினரையும் இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை செய்யும் நடவடிக்கைகளை சமூக விரோதிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இது மிகவும் அபாயகரமானது, என்பதோடு எதிர்கால இளம் சமூகத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையாகவும் இதனை எச்சரிக்கையோடு நோக்க வேண்டியுள்ளது.
ஏறாவூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு கட்டமாக ஏறாவூர் நகரிலுள்ள மருந்துக்கடை உரிமையாளர்கள், அதன் ஊழியர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வூட்டல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments: