வெலிமடை பகுதியில் வீடு ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் தனது மனைவியும் உறவினர்களின் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தொழிலாளி ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
வெலிமடை பிரதேச சபைக்குச் சொந்தமான, காணியிலுள்ள தொழிலாளியின் வீட்டின் மீது நேற்று (12) இரவு 9.30 மணியளவில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
இவ்விபத்தில், 18 வயதான வீ. சுரஞ்சனி மற்றும் இரு சிறுவர்களான எம். ராமகிருஷ்ணன் (14), சுபுன் குமார (10) ஆகிய மூவரே உயிரிழந்துள்ளனர்.
இதில் எம். மஹேந்திரன் (22) என்பவர் காயங்களுக்குள்ளாகி பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவரான எம். மகேஸ்வரன் (23) கருத்து தெரிவிக்கையில்,
“விபத்தில் எனது மனைவியே உயிரிழந்துள்ளார். எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. மற்றைய இரண்டு சிறுவர்களும் இரவில் தங்குவதற்காக வீட்டிற்கு வந்த உறவினர்களின் பிள்ளைகள்.
நேற்று இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. வெலிமடை பகுதியில் பகலில் பலத்த மழை பெய்து வருகின்றது.
நாங்கள் இரவு உணவு சாப்பிட்டு தூங்கினோம். திடீரென்று, வீட்டிற்கு மேலே ஒரு பெரிய மரம் வீழ்ந்தது.
அதில் சிக்கிய நான் உட்பட வீட்டிலிருந்த 06 பேரையும் அயலவர்கள் வெளியே எடுத்து வெலிமடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் எனது மனைவி உள்ளிட்ட 3 பேர் மரணமடைந்துள்ளனர்." என்றார்.
0 comments: