Home » » யாழில் தாயொருவருக்கு கிடைத்த ஒரு நிமிட சந்தர்ப்பம்! சஜித் வழங்கியுள்ள உறுதி

யாழில் தாயொருவருக்கு கிடைத்த ஒரு நிமிட சந்தர்ப்பம்! சஜித் வழங்கியுள்ள உறுதி


காணாமல்போனோர் விடயத்தில் தான் கரிசனையுடன் செயற்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் வைத்து தாயொருவருக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
என்ரபிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயாரொருவர் சஜித் பிரேமதாசவுடன் பேச முற்பட்ட போதும், சஜித்தின் பாதுகாவலர்கள் அந்த தாயாரை தடுத்துள்ளனர்.
இதன்போது அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டை அனுகிய குறித்த தாய் தனது விபரத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, சஜித்துடன் ஒரு நிமிடம் பேச வாய்ப்பை பெற்று தருமாறு கோரியுள்ளார்.
அந்த தாயின் கோரிக்கையை நிறைவேற்றிய யாழ். மாநகர முதல்வர், சஜித் பிரேமதாசவை ஒரு நிமிடம் சந்திக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த தாயார், நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிகின்றோம். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமாயின் வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவினை தர வேண்டும் என அமைச்சரிடம் கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, காணாமல் போனோர் விடயத்தில் நான் கரிசனையுடன் செயற்படுவேன். காணாமல் போனார் பற்றிய அலுவலகம் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஊடாக நடவடிக்கை எடுப்பேன். அத்துடன் காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் எனது நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |