ஆண்டு தோறும் நடைபெறும் பெரஹராவில் 50-க்கும் மேற்பட்ட யானைகளும், 200-க்கும் அதிகமான கலைஞர்களும் இணைந்து மக்களை மகிழ்விப்பர். ஊர்வலங்கள் நடக்கும். கண்டி முழுவதும் பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் மின் விளக்குகள் ஒளிர விடப்படும்.
யானைகள் ஊர்வலமும் சிறப்பாக இடம்பெறும். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 70வயது மதிக்கத் தக்க டிக்கிரி என்னும் யானையின் உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்களும் புகைப்படங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் சேவ் எலிபேண்ட் (Save Elephant ) என்ற அறக்கட்டளை தங்கள் மூகப் புத்தக பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளதுடன் பின்வருமாறு கருத்தும் பகிர்ந்திருக்கிறார்கள்.
“ டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர்.
டிக்கிரி தினமும் பல கிலோமீட்டர்களுக்கு நடந்து அழைத்துச் செல்லப்படுகிறது. அப்படிச் செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும் கட்டளையிடுகின்றனர். அவளின் உடல் முழுவதும் பட்டாடைகளால் மூடி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதனால் யானையின் எலும்பு உடம்பு மக்களுக்குத் தெரிவதில்லை. அதிக வெளிச்சத்தினால் அவளின் கண்களில் வரும் கண்ணீரையும் யாரும் கவனிப்பதில்லை.
விழா என்பது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒன்று. ஆனால் அது பிறருக்கு எந்த கஷ்டத்தையும் அளிக்காமல் இருக்க வேண்டும். டிக்கிரியை கஷ்டப்படுத்திப் பெறப்படும் ஆசீர்வாதம் எப்படிச் சிறந்ததாக இருக்கும்.
டிக்கிரியின் புகைப்படம் ஏற்றுக்கொள்ள தக்கதாக இருந்தால் நம்மால் அவற்றுக்கு எப்போதும் அமைதியான வாழ்வைத் தர முடியாது. அன்பு செய்வது, எந்தத் தீங்கும் செய்யாதது மற்றும் இரக்கத்தின் பாதையைப் பின்பற்றுவது போன்றவை புத்தரின் வழி. அதைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வயதாகி உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் யானையை இம்முறையும் விழாவிற்குப் பயன்படுத்தியமை மனிதாபிமானமற்ற செயல் என விலங்கியல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
0 comments: