ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கும் நிலையில், வேட்பாளராக மக்கள் மத்தியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும் சஜித்திற்கு ரணில் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் என தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பின் போது கட்சிக்கு தெரியாமல் பேரணிகளை ஏற்பாடு செய்த அனைவருக்கு எதிராகவும் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க போவதாக ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் களமிறங்க போவதாக வெளிப்படையாக கூறி வருவதோடு, அதற்கான கூட்டங்களையும் தற்போது நடத்தி வருகின்றார்.
நேற்றைய தினம் மாத்தறையில் சஜித் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இதன் காரணமாகவே ரணில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கட்சியின் தலைமை மற்றும் கட்சியைப் பிளவுபடுத்தும் வகையில் விமர்சனங்களை முன்வைப்பவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் முறையான விசாரணையை மேற்கொண்டு, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள குழுவொன்றுறையும் அமைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விசாரணைகளின்போது குற்றவாளிகள் எனக் கண்டறியப்படுகின்ற அனைவரும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனவும் தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
0 comments: