Home » » கிழக்கில் நிரந்தரமான வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிப்பதாயின் இதனை பின்பற்ற வேண்டும்: ஸ்ரீநேசன்

கிழக்கில் நிரந்தரமான வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிப்பதாயின் இதனை பின்பற்ற வேண்டும்: ஸ்ரீநேசன்

கிழக்கு மாகாணத்திலோ, மட்டக்களப்பிலோ நிரந்தரமான வலயக் கல்விப் பணிப்பாளரை ஒருவரை நியமிப்பதானால் பொது நியமனங்களை அடிப்படையாக வைத்து இதற்கான நேர்முக பரீட்சை நடத்தப்படுவதுடன், அந்த நேர்முகப் பரீட்சையில் முக்கியமாக வர்த்தமானியில் கூறியவாறு பொது ஆளணியினருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் ஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கிழக்கு மாகாண கல்வி கல்வி அமைச்சின் ஊடாக வலயக் கல்வி பணிப்பாளர்களை நிரந்தரமாக நியமிப்பதற்காக ஒரு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அந்த அடிப்படையில் நியமங்கள் அல்லது பிரமாணங்களுக்கு அமைவாக இந்த நேர்முகப் பரீட்சை நடைபெற வேண்டும்.
ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரை தெரிவு செய்வதாக இருந்தால் நிச்சயமாக இலங்கை கல்வி நிர்வாக சேவை என்கின்ற விடயம் முக்கியமாக அமைந்திருக்கின்றது.
இந்த இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இரு வகையான ஆளணிகள் காணப்படுகின்றார்கள். அதில் ஒரு வகை பொது ஆளணி. மற்றையது விஷேட ஆளணி ஆகும். அந்த அடிப்படையில் ஒரு வலயக் கல்விப் பணிப்பாளராக தெரிவு செய்யப்படுகின்றவர் நிச்சயமாக பொது ஆளணி முதலாம் வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இதில் முதலாம் வகுப்பைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்காத விடத்து இலங்கை கல்வி நிர்வாக சேவை இரண்டாம் வகுப்பிலுள்ள பொது ஆளணியினரை தெரிவு செய்ய வேண்டும்.
அவ்வாறனவர்களும் விண்ணப்பிக்காதவிடத்து இலங்கை கல்வி நிர்வாக சேவை மூன்றாம் வகுப்பினரை தெரிவு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. இதுதான் 2015ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விடயம்.
அடுத்தது விசேட ஆளணியினர், இவர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவை இரண்டாம், மூன்றாம் வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் பாடவாரியாக நியமிக்கப்படுகின்றவர்களாக உள்ளனர். அந்த அடிப்படையில் இவர்கள் பாடங்களை மேற்பார்வை செய்கின்ற பணியினை மேற்கொள்ள வேண்டும்.
இதில் விஷேட ஆளணி இரண்டாம், மூன்றாம் வகுப்பினர் பொது ஆளணிக்குரிய கடமையினை வகிக்க முடியாது என்பது வர்த்தமானியில் தெளிவாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பொது ஆளணியினர் விஷேட ஆளணியினரின் கடமையினை வகிக்க முடியாது என்பதும் சொல்லப்பட்டுள்ளது.
இங்குள்ள விடயம் என்னவென்றால் கிழக்கு மாகாணத்தில் கடந்த 2017ல் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையின் போது ஒரு தவறான பிரமானங்களை பின்பற்றப்பட்டு ஒரு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டிருந்தது.
இதில் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கும் விதத்தில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதன் காரணமாக பொது ஆளணி இரண்டாம் வகுப்பினரை புறக்கணித்துவிட்டு மூன்றாம் வகுப்பிலுள்ள விஷேட ஆளணியினரை நியமிக்கும் விதத்தில் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கிழக்கு மாகாணசபையினால் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் நிரந்தரமாக ஒரு வலயக் கல்வி பணிப்பாளரை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
இந்ததேவேளையில் நான் கூறுவது என்னவென்றால், மட்டக்களப்பிலோ கிழக்கு மாகாணத்திலோ ஒரு நிரந்தரமான வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிப்பதற்கான பொது நியமங்களை அடிப்படையாக வைத்து இதற்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்பட வேண்டும். அந்த நேர்முகப் பரீட்சையில் முக்கியமாக வர்த்தமானியில் கூறியவாறு பொது ஆளணியினருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
எனவே கிழக்கு மாகாணத்திலுள்ள ஓரிரு அதிகாரிகள் இவ் விடயத்தில் 2017ம் ஆண்டில் திட்டமிட்டு தவறினை செய்துள்ளார்கள். இந்தத் தவறு மீண்டும் ஏற்படாவண்ணம் இந்த கிழக்கு மாகாண பொறுப்புமிக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கின்றேன்.
ஆகவே, இந்த விடயத்தினை கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண கல்விச் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு போன்றோரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு வருகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |