இலங்கையில் இன்னொருவருடைய தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகுமென மேற்படி திணைக்களம் கூறியுள்ளது.
இவ்வாறு வைத்திருந்த சில நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,
”இத்தகைய குற்றவாளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம் அல்லது 5 வருட சிறைத்தண்டனையை விதிக்க முடியும். இவ்வாறான நபர்கள் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அருகில் உள்ள பொலிஸிற்கு அல்லது திணைக்களத்திற்கு அறிவிக்கவேண்டும்.
தேசிய அடையாள அட்டை காணாமல் போகுமிடத்து, புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட பின்னர் காணாமல் போன அடையாள அட்டை மீண்டும் கிடைக்குமாயின் கிராம உத்தியோகத்தர் அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் இன்னொருவரின் தேசிய அடையாள அட்டையை தன்வசம் வைத்திருப்பதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ளவேண்டும்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments: