Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கோப்பாய் பொலிஸாரின் சித்திரவதை தாங்காமல் கழுத்தை அறுத்து தற்கொலை செய்யமுயன்ற இளைஞன்


கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞன்ஒருவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் தனக்கு நடந்த கொடுமைகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். அதனையடுத்து சந்தேகநபரை பொலிஸார் சட்டவிரோதமாகத் தடுத்துவைத்திருந்தமை மற்றும் அவரைத் தாக்கியமைக்காக யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், கோப்பாய் பொலிஸாரைக் கண்டித்தார்.
இக்கைது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கஞ்சா கலந்த சுருட்டுடன் நடமாடினார் என்ற குற்றச்சாட்டிலேயே இளைஞர் மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். அந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு விசாரணைக்கு சந்தேகநபர் மன்றில் தோன்றத் தவறியதால், அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பிடியாணை நடைமுறைப்படுத்திய கோப்பாய் பொலிஸார் சந்தேகநபரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனர். எனினும் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவில்லை.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் சந்தேகநபர் முற்படுத்தப்பட்டார். அவரது கழுத்து மற்றும் கையில் பன்டேஜ் போடப்பட்டிருந்தது. நடப்பதற்கு கஷ்டப்பட்டு சந்தேகநபர் எதிரிக் கூண்டில் ஏறினார்.
சந்தேகநபரின் நிலை அறிந்த மன்று, என்ன நடந்தது? என்று கேள்வியெழுப்பியது.
“பொலிஸார் என்னை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைது செய்த நாளிலிருந்து என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தார்கள். கையில் நெருப்பால் சுட்டார்கள். 3 நாட்களாக எனக்கு பெரும் சித்திரவதை செய்தனர் என்று மன்றில் தெரிவித்தார்.
ஆகவே பொலிஸாரின் சித்திரவதையைத் தாங்க முடியாமல் எனது கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தேன். அதன்பின்னர் தான் என்னை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தனர்” என்று சந்தேகநபர் கண்ணீர்விட்டு அழுதார்.
சந்தேகநபரால் கூறப்பட்டவை தொடர்பில் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பிய மன்று, அவர்களை கடுமையாக எச்சரித்தது. அத்துடன், சந்தேகநபர் விடுவிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments