Home » » யாழில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிய கஜா புயல்

யாழில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிய கஜா புயல்

கஜா புயல் யாழ்ப்பாணம் மற்றும் யாழ்ப்பாணத்தை அண்டிய பிரதேசங்களில் மெல்ல மெல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இது தொடர்பாக யாழ் நகர மத்தியிலிருந்து ஐபிசி-யின் செய்தியாளர் வழங்கும் நேரடித்தகவல்கள் இதோ!
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயலின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், யாழ். கோட்டைப் பகுதியில் பலத்த காற்று வீசுவதுடன், அங்கிருக்கும் கடைத்தொகுதிகளின் தகரங்கள் காற்றின் வேகத்தால் தூக்கி எறியப்பட்டுள்ளன.
கஜா புயல் இன்று பின்னிரவு இலங்கையின் வடக்கு மாகாண கரையோரப் பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என்றும் கனமழையுடன் காற்றின் வேகமும் உயர்வாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு கரையோர மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதிகளில் கஜா புயலின் தாக்கம் தென்படுவதாக அறியமுடிகின்றது.


கஜா புயல் தொடர்பில் நவம்பர் 14-ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டிருந்த முன்னறிவித்தல்.
மத்திய வங்காள விரிகுடாவில் காணப்படும் “GAJA” என்ற சூறாவளி மேலும்வலுவடைந்து 14ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து அண்ணளவாக 480 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 12.0N, கிழக்கு நெடுங்கோடு 83.8E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 06 மணித்தியாலங்களில் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்வதுடன் பலமான சூறாவளியாக விருத்தியடையும் சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதி நவம்பர் 15-ஆம் திகதி மாலையில் தென் தமிழ்நாடு கரையைக் கடப்பதுடன் இலங்கையின் வடக்கு கரைக்கு நெருக்கமாகவும் நகரக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
மீனவர்கள் பொத்துவிலிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் இன்று மாலையிலிருந்துகாற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 110 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் வரை காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
தென் கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என குறித்த வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தல் 2018 நவம்பர் 14-ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |