நடிகர் விஜய் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், ஆட்சியாளர்களையும் விமர்சித்து காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இதன் காரணத்தினால் அதிருப்தியடைந்துள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்திவருவதாக தெரிகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி என்ற பெயரையே சர்கார் திரைப்படத்தின் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு சூட்டி அவரை இழிவு படுத்தும் வண்ணம் பல காட்சிகளும், தற்போதைய அரசு குறித்து சர்ச்சைக்குரிய கட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக ஆளும் தரப்புக்கு தொடர்ச்சியாக தகவல்கள் பறந்த நிலையிலேயே மேற்கண்ட ஆலோசனை உயர்மட்டத்தில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படியான விமர்சனங்களை தொடர்ச்சியாக அனுமதித்தோமேயானால் சரிவராது என கருதும் ஆளும் தரப்பு குறிப்பிட்ட காட்சிகளை படக்குழு நீக்காவிடில் நிச்சயம் சர்கார் திரைப்படத்தை தடை செய்யும் முடிவிலேயே உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இத்தகைய செயற்பாடுகள் நல்லதல்ல. குறிப்பிட்ட சில காட்சிகளை அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது என செய்தி மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சர்கார் படக்குழுவினரை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments