இலங்கையானது சிங்கள மக்களுக்கே சொந்தமானது என தெரிவித்துருக்கும் சிறிலங்காவின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், தமிழ் மக்களுக்கு தீர்வு அவசியம்தானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் சிங்களத் தலைவர்கள் எல்லோரும் தவறிழத்தவர்கள் அல்லர் எனக் கூறியிருக்கும் அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வதேச ஊடகமான பிபிசியின் சிங்கள சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே முரளிதரன் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த முரளிதரன், இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் தமக்கான உணவைத்தான் கோருகின்றனர் எனவும் ஜனநாயகத்தையோ அல்லது தமது உரிமைகளையோ கோரவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட முரளிதரன்,
”பாராளுமன்றத்திற்கு தமது பிரதி நிதிகளை அனுப்பிவைக்கும் மக்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்பது தமது உரிமைகளையோ ஜனநாயகத்தையோ அல்ல தமக்கான மூன்று வேளை உணவும் தடையின்றிய கல்வியும் கிடைக்கவேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள். இதனை நான் கூறுவதால் என்ன யாராவது தவறாக எடுக்கக்கூடும். ஆனால் உண்மை அதுதான்.
தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதை விடுத்து உரிமை, ஜனநாயகம் என காலத்தை வீணடிக்கின்றன. இந்த நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிங்கள பௌத்தர்களாவர். எனவே இது சிங்களவர்களுக்குரிய நாடுதான். ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் இங்கு சிறுபான்மையினர் என்பதுதான் உண்மை. ஆனால் கிரிகெட் விளையாட்டுத்துறையில் எனது திறமையினை மூவின மக்களும் ஏற்றுக்கொண்டதுடன் உற்சாகமளித்தனர்.
வடக்கில் ஒரு சிறுமி வறுமை காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்தாள், ஆனால் வடக்கில் உரிமை குறித்தும் ஜனநாயகம் குறித்தும் பேசிக்கொள்ளும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கரிசனை கொண்டார்களா? பேசிக்கொண்டார்களா?
தமிழ் அரசியல்வாதிகள் ஜனநாயகம் குறித்தும் உரிமைகள் குறித்தும் பேசிவருகின்றனர். உண்மையில் தமிழ் மக்களுக்கு அடிபடையாக அவை தேவைதானா என கேள்வியெழுப்பவிரும்புகிறேன். எல்லோரும் தவறிழைத்தவர்கள்தான். சிங்களவர்கள் எல்லோரும் தவறிழைக்கவில்லை. 5 வீதமானவர்கள்தான் தவறிழைத்தனர்.
பிரபாகரனால் உருவாக்கப்பட்ட இயக்கம் ஆரம்பத்தில் சரியான வழியில் பயணித்திருந்தாலும் இறுதியில் பயங்கரவாதிகளாக மாறியது. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை நீதிமன்றத்தினூடாக தீர்க்கப்படவேண்டும். ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து மகளை அணிதிரட்டி தமது பலத்தை நிருபிக்க முனைகிறர்கள். உண்மையில் இவற்றில் கலந்துகொள்பவர்களில் பத்துப்பேரைத் தவிர உணவுக்காகவும் ஏனைய சலுகைகளுக்காகவும் செல்வோரே அதிகம்” என தனது காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார் முரளிதரன்
இதேவேளை முத்தையா முரளிதரனின் மேற்படி கூற்றுக்களுக்கு சமூக வலைத்தளங்களில் தமிழர்கள் தமது எதிர்ப்பினைப் பதிவுசெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறாயினும் முத்தையா முரளிதரனுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்ந்து ஏராளமான ரசிகர்கள் இருந்தமையும் இருந்துவருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதுடன் முரளிதரனின் இந்த கருத்து பலரை அதிர்ச்சிக்கும் புண்படுத்தலுக்கும் உள்ளாக்கியிருக்கிறது என்றே சொல்லமுடியும்.
0 Comments