இலங்கையின் பல பிரதேசங்களிலும் இன்றைய தினமும் பலத்த மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் மேற்படி திணைக்களம் இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,
தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம்விருத்தியடைந்துள்ளதன் காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
0 comments: