நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தப் போவதில்லை என உறுதி அளித்துள்ள ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள தரப்பை ஏற்றுக்கொள்வதாகவும் உறுதியளித்திருக்கின்றார்
ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவுடன் இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் நடத்திய அவரச கலந்துரையாடலின் போதே அவர் இந்த இணக்கத்தை தெரிவித்ததாக நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பண்பான முறையில் செயற்படும் பட்சத்தில் நாளைய தினம் குரல் மூல வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க தாம் இடமளிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக ராஜித்த கூறினார்.
சிறிலங்கா ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவிற்கும் அவரது அமைச்சரவைக்கும் எதிராக நேற்றைய தினம் ஜே.வி.பி யினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
எனினும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குழறுபடிகள் இருப்பதாக கூறி மஹிந்தவும் அவரது விசுவாசிகளும் நிராகரித்திருந்த நிலையில் அவரை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் நேற்றைய தினம் இரவு நிராகரித்து கடிதமொன்றை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
மிகவும்கடும் தொணியிலான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி அனுப்பியிருந்த இந்தக் கடிதத்தில் பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கும், அவரை நீக்குவதற்கும் தன்கே அரசியல் சாசனத்தின் படி அதிகாரம் இருப்பதாக கூறியிருந்த மைத்ரி, தனது இந்தத் தீர்மானத்தை கேள்விக்குட்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மைத்ரியின் இந்தக் கடிதத்தால் கடும் ஆத்திரமடைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு அளித்த கட்சிகள் இன்று காலை இடம்பெறவிருந்த ஜனாதிபதியுடனான சந்திப்பையும் பகிஷகரித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றில் மைத்ரி - மஹிந்த தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கைகலப்புக்களை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகளாக இருக்கும் ஜாதிக்க ஹெல உறுமய, தமிழ் முறபோக்கு முன்னணி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைய இன்றைய தினம் கொழும்பு காலி முகத்திடலுக்கு எதிரிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி குறித்த கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் இணைந்துகொண்டிருந்தார். இதற்கமைய இடம்பெற்ற கலந்துரையாடலில் அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடையின்றி கொண்டுநடத்த இடமளிக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களும், சபாநாயகரும் கோரக்கை விடுத்திருக்கின்றனர்.
இணைப்பு 01
ஜனாதிபதி தலைமையில் கட்சித்தலைவர்களின் கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த கூட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கூட்டம் காரணமாக அவ் வழியான போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸாரும் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0 comments: