Home » » கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட ஜனாதிபதியின் உரை!

கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட ஜனாதிபதியின் உரை!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73 ஆவது கூட்டத்தில் ஆற்றுவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த உரை இறுதிநேரத்தில் மாற்றப்பட்டு, திருத்தப்பட்ட உரையையே ஆற்றியிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் ஐ.நா பொதுச் சபைக்கு சென்றுள்ள அமைச்சர் மனோ கணேசன், அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், உண்மையில் ஜனாதிபதி ஆற்ற வந்த உரை இதுவல்ல. ஆனால் இறுதி தினங்களில் உரை வடிவம் மாற்றப்பட்டது. அது எப்படி, ஏன் என்ற விபரங்களை பகிரங்கமாக கூறமுடியாது என்று தெரிவித்திருக்கின்றார்.
ஐக்கிய நாடுகளின் 73 ஆவது பொதுச் சபையில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சிறிலங்காவின் விவகாரங்களில் தலையிடாது,புதிய கண்ணோட்டத்துடன் பார்க்குமாறு உலக தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஐ.நா சபையில் உரை நிகழ்த்தி இறங்கி வந்ததும் அமைச்சர்கள் குழு ஜனாதிபதியை சூழ்ந்த போது, தன்னை அழைத்த ஜனாதிபதி மைத்திரி, தனது தோளில் கைகளை போட்டவாறு, அமைச்சர் மனோ கணேசன் அவர்களே என்ன, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லை தானே! இப்போது திருப்தி தானே?" என்று கூறியதாக அமைச்சர் மனோ தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்துவரும் மைத்ரிபால சிறிசேன, குறித்த தீர்மானத்தை திருத்தம் செய்யவேண்டும் என வலியுறுத்தி ஐநா பொதுச் சபையில் யோசனையொன்றை முன்வைப்பதாக கொழும்பில்வைத்து அறிவித்திருந்தார்.
இதற்கமைய ஐ.நா உரையின் போது இந்தக் கோரிக்கையை அவர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதற்கான எந்தவொரு கருத்துகள் எதுவும் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறவில்லை.
வழமையாக சிறிலங்காவிற்குள் பேசிவரும் கருத்துகளையே ஜனாதிபதி தனது உரையிலே குறிப்பிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் மனோ கணேசன், சர்வதேசம் சிறிலங்காவை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்" என்று கூறியிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
எனினும் அந்த புதிய கண்ணோட்டம் என்னவென்று கூறவில்லையே என்று தான் அவரிடம் குறிப்பிட்டதுடன், அது என்னவென்று ஊருக்கு போய் விளக்கமாக சொல்லுங்கள் என கிண்டலாக கூறியதாகவும் மனோ தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை உண்மையில் ஜனாதிபதி ஆற்ற வந்த உரை இதுவல்ல என்றும் குறிப்பிட்டுள்ளஅமைச்சர் மனோ, இறுதி தினங்களில் அவரது உரை வடிவம் மாற்றப்பட்டதாகவும், அதற்கு திரைமறைவில் பல விடையங்கள் நடந்தேறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் அவை தொடர்பான விபரங்களை பகிரங்கமாக கூற முடியாது என்றுதெரிவித்திருக்கின்றார்.
எவ்வாறாயினும் டுவிட்டர் பதவில் , பெரும்எதிர்பார்ப்புடன் இருந்த சிங்கள மற்றும் தமிழ் கடும்போக்காளர்களை மைத்ரிபால சிறிசேனவின் உரை ஏமாற்றமடையச் செய்து விட்டதாக அமைச்சர் மனோ குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |