அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளால் இன்று சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் இணைப்பாளர்களான கே.பிரபாகரன் மற்றும் எஸ்.சுதாகரன் ஆகியோரின் தலைமையில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், முன்னாள் போராளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
|
இதன்போது கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட ஜனநாயகக் கட்சியின் இணைப்பாளர் எஸ்.சுதாகரன்,“கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரை இம்மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வந்த நிலையில், 2006ஆம் ஆண்டுடன் இங்கு உயிர் நீத்த மாவீர்களுக்கு நினைவேந்தல்கள் இடம்பெறவில்லை.
அந்தவகையில் இம்முறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ள சுமார் 700 மாவீர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அதனடிப்படையில் இன்று முன்னாள் போராளிகள் ஆகிய நாங்கள் ஒன்றிணைந்து எமது மாவீர்களின் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
![]() ![]() ![]() |
0 Comments