மட்டக்களப்பு மாவட்டம் நவகிரி பிரிவு பெரும்போக வேளாண்மைச் செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் வெல்லாவெளி காலாசார மத்தியநிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராசா, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், உள்ளிட்ட ஏனைய திணைக்களத் தலைவர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது 2017 ஆம், 2018 ஆம் அண்டுக்கான பெரும்பொக வேளாண்மைச் செய்கை தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இப்பகுதியில் மானாவாரி, சிறுநீர்ப்பாசனம், பெருநீர்ப்பாசனம், அடங்கலாக 2300 ஏக்கரில் வேளாண்மைச் செய்கைபண்ணுதல், விதைப்பு ஆரம்பிப்பது எனவும் 20.10.2017 விதைப்பினை 05.11.2017 முடிவுசெய்;வது எனவும், நீர் வினியோகம் தேவையின் அடிப்படையில் குளத்தின் நீர்மட்டத்தைப் பொறுத்தும், நீர் வினியோக செய்தல்,அறுவடை செய்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
ஒரு ஏக்கர் உழவு செய்வதற்கு 4000 ரூபாவும், காவல் குடிசை ஒன்றுக்கு 700 ரூபாவும், காவலாளி ஒருவருக்கு நாட்கூலி 1000 ரூபாவும், வேலையாள் ஒருவருக்கு நாட்கூலி 1000 ரூபாவும், வாய்க்கால் துப்பரவு செய்யாதவர்களுக்கான தண்டப்பணம் பாகம் ஒன்றிற்கு 300 ரூபாவும், வட்டைச் சுதந்திரம் ஏக்கருக்கு அரைப் புசல், ரயர் இயந்திர அறுவடை ஒரு ஏக்கருக்கு 4000 தொடக்கம் 4500 ரூபாவும், சங்கிலி இயந்திர அறுவடை ஏக்கருக்கு 5000 தொடக்கம் 5500 ரூபாவும், எனவும் தீர்மானிக்கப்பட்டன.
இப்போகத்தில் சிபார்சு செய்யப்பட்ட நெல்லினங்களாக இரண்டரை மாத நெல்லினங்கள் பி.ஜி 350, பி.ஜி 257.மூன்று மாத நெல்லினங்களாக பி.ஜி 310, பி.ஜி 300, பி.ஜி 305, பி.ஜி 306, ஏ.ரி 307, ஏ.ரி 308 மூன்றரை மாத நெல்லினங்களாக பி.ஜி 360, பி.ஜி 370, பி.டப்ளியு 367, பி.ஜி 97-1 , பி.ஜி 352 , பி.ஜி 357 , பி.ஜி 358, பி.ஜி 366, ஏ.ரி 353, ஏ.ரி 353, ஆகியவற்றை விதைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் விவசாயிகளின் நன்மை கருதி இப்பகுதியிலுள்ள காட்டு யானைகளை அப்புறப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் யானைகளினால் ஏற்படும் சேதங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
கனிய வளங்கள் திணைக்களம் இப்குதியில் மண் அகழ்வுக்கு அனுமதி வழங்காமல் மண்ணால் மூடப்பட்டுக் கிடக்கும் குளங்கள் மற்றும் ஆறுகளை அடையாளம் கண்டு அங்குள்ள மண்ணை அகழ்தல். உள்ளிட்ட பல தீர்மானங்கள் இதன்போது நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments