Home » » இரண்டு வாரங்களுக்குள் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கின்றோம் : மேதினக் கூட்டத்தில் சம்பந்தன்

இரண்டு வாரங்களுக்குள் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கின்றோம் : மேதினக் கூட்டத்தில் சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் அரசாங்கத்திடம் இருந்து நல்லதோர் முடிவினை எதிர்பார்த்து இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் ஆலையடி வேம்பு தர்ம சங்கரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுக்குரியதே தவிர, தனிப்பட்ட ஒரு இனத்திற்கு உரித்துடையதல்ல. ஒரு இனம் மாத்திரம் உரிமை கோர முடியாது.
இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு இனமும் சமத்துவமாகவும், சமாதானமாகவும் மற்றும் கௌரவமாகவும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
நீதி நியாயத்தின் அடிப்படையில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். நல்லிணக்கம், ஒற்றுமை என்பன ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்த நாட்டில் கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட யுத்தத்தினால் பல இராணுவ செலவுகள் மற்றும் இழப்புகள் என்பன ஏற்பட்டிருக்கின்றன. இதனால் நாடு முன்னேற முடியாமல் பொருளாதார ரீதியாக பல பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றது.
ஆசியாவில் பல்வேறு நாடுகள் பல முன்னேற்றங்களை அடைந்து இருக்கின்றன. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் முன்னேறி உள்ளன.
அதனால் அந்நாட்டு மக்கள் கௌரவமாக வாழ்கின்றனர். ஆனால் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அந்நிலையினை இன்னும் அடையவில்லை.
இந்த நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படாமையினால் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனை மாற்ற வேண்டும்.
விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப எம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் பொருளாதார ரீதியாக முன்னேற முடியும்.
வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் கட்டாயமாக ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியும். எமக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் அது எமக்கு பாதகமாக அமையும்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் தமிழர்களுக்கு சமஷ்டி முறையிலான தீர்வுத்திட்டத்திற்கு வாய்ப்பிருந்தது.
1987 ஆண்டுக்குப் பின்னரும் சமஷ்டி முறையிலான தீர்விற்கு வாய்ப்பு இருந்தது. அது எமக்குக் கிடைக்காது கை நழுவிப் போய்விட்டது.
இதன் காரணமாக தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு எம்முடைய மக்கள் எம்முடன் இருக்க வேண்டும்.
அதேவேளை, இனிமேல் எமது மக்களுக்கு வழங்கப்படுகின்ற எந்த தீர்வாக இருந்தாலும் எமது மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வாக இருக்க வேண்டும்.
அப்போது தான் நாம் அதை ஏற்றுக்கொள்வோம். அந்த விடயத்தில் எமது கட்சி உறுதியாக இருந்து செயற்பட்டு வருகின்றது.
சர்வதேசம் இந்த நாட்டின் நடவடிக்கைகளை உற்றுநோக்கிக் கொண்டு இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.
அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் சரியான முறையில் அரசியல் சாசனம் மாற்றப்பட்டு, நியாயமான அரசியல் தீர்வு மக்களுக்கு இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளித்து, அவர்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் வாழக்கூடிய நிலை இந்த நாட்டில் ஏற்பட வேண்டும்.
அதனை அடைவதற்குத்தான் எமது அரசியல் பயணத்தினை அமைதியான முறையில் நகர்த்திக் கொண்டு இருக்கின்றோம். சர்வதேச சந்தையில் முதலீட்டை செய்ய வேண்டுமானால் இலங்கையில் நியாயமான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டதற்கு இணங்க வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய அரசாங்கம் பல அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளது. குறிப்பாக திருகோணமலையை மையப்படுத்தியும் ஏனைய பகுதிகளையும் அபிவிருத்தி செய்யவுள்ளனர்.
முழுமையான அரசியல் தீர்வு வழங்கப்பட்டால்தான் இந்தியாவின் மூலம் செய்யப்படும் அபிவிருத்தியை பூரணமாக பெற்றுக் கொள்வதற்கு நல்லதாக அமையும் என மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |