பதவிக்காலம் நிறைவடைந்து செல்லும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரிடமிருந்து ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு .
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பதவியிலிருந்து விடைபெறும் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தனது பதவியிலிருந்து விடைபெறமுன்னர் இலங்கை ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்ட பான் கீ மூன் அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இலங்கை, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டியதுடன் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் இலங்கையை புதிய பாதையில் பயணிக்கச் செய்வதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை, எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெறும் எனவும் குறிப்பிட்டார்.
பதவியிலிருந்து விலகிச்சென்றாலும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் பான் கீ மூன் அவர்கள் இதன்போது உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பான் கீ மூன் அவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


0 Comments