கடந்த பல தசாப்தங்களில் சில உள்ளுராட்சி நிறுவன அரசியல்வாதிகள் ஊழல், மோசடி, முறைகேடுகளை மேற்கொண்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் காரணமாக அவர்களது அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்கமும் அவர்களது தலைவர்களும் மக்களால் வெறுக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவிக்கு அடுத்தாக கூடுதல் நிறைவேற்று அதிகாரமுடைய உள்ளுராட்சி நிறுவன தலைவர்கள் எப்போதும் தமது அதிகாரத்தை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்த வேண்டுமெனவும் தமது அதிகாரங்களை மக்கள் நலனுக்காக பாவிக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் மக்களால் பாராட்டப்படுவதாகவும் அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களும் நல்லாட்சியின் மையங்களாக மாற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற ‘சுவர்ண நகரம்ஞூ விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களது பிரச்சனைகளை தேடிச்சென்று அவற்றுக்கு தீர்வு வழங்குவது அரசியல்வாதிகளினதும் அரச அலுவலர்களினதும் பொறுப்பாகுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அபிவிருத்தி, நல்லாட்சி, நிதி முகாமைத்துவம், சமூக நலன்புரி செயற்பாடுகள் போன்றவற்றில் உள்ளுராட்சி நிறுவனங்கள் கொண்டிருக்கும் வரையறையற்ற அதிகாரங்கள் மூலம் தமது சேவை சிறப்பினை காட்டுவதற்கு அனைத்து உள்ளுராட்சி நிறுவன அரசியல்வாதிகளும் அரச அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். -
0 Comments