Advertisement

Responsive Advertisement

பட்ஜெட்டின் பின் அமைச்சரவை அதிரடியான மாற்றம்: 5 சிரேஷ்ட அமைச்சர்களுக்கு புதிய பதவி?

பட்டிஜட் தொடர்பான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் அமைச்சரவையில் முக்கியமான மாற்றங்களைச் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்திருக்கின்றது. குறிப்பிட்ட அமைச்சர்கள் சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த மாற்றங்களைச் செய்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். முக்கியமாக ஐந்து சிரேஷ்ட அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என அறியவருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பதவிக்குக் கொண்டுவருவதற்கு உதவிய சிவில் அமைப்புக்கள் சில இது தொடர்பில் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துவருவதாகத் தெரிகின்றது. இதன்போதே விரைவில் அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்வதற்கு ஜனாதிபதி இணங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.தே.க. முக்கியஸ்த்தர்கள் சிலருடனும் ஜனாதிபதி இது தொடர்பில் ஏற்கனவே பேசியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதிலும், பட்ஜெட் வாக்கெடுப்பு முடிந்தவுடன் அதிரடியாக இந்த மாற்றம் இடம்பெறலாம் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஞாயிறு தினக்குரலுக்கு நேற்றுத் தெரிவித்தார். இரண்டு பிரதான கட்சிகளையும் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவர்களுக்கு முக்கியத்துவமற்ற அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றைத் தெரிவித்திருக்கின்றன. சிரேஷ்ட்ட அமைச்சர்கள் சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதால் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதியை இந்த அமைப்புக்கள் வலியுறுத்தியிருந்தன.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவில் அமைப்புக்களுக்கு உறுதியளித்திருந்தார். இருந்தபோதிலும் நவம்பர் 10 ஆம் திகதி பட்ஜெட் முன்வைக்கப்படவிருப்பதால், அது தொடர்பான விவாதம் முடிவடைந்தவுடன் இந்த மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Post a Comment

0 Comments