பிரேசில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தில்மா ரூசெப் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவில் வாக்குகள் அவருக்கு எதிராக அமைந்ததால், அந்த நாட்டு இடதுசாரிகளின் 13 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
பிரேசில் பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 81 பேரில் 61 பேர் ரூசெப்க்கு எதிராக வாக்களித்தனர். இதனையடுத்து பிரேசிலின் ஜனாதிபதி பதவியிலிருந்து ரூசெப் நீக்கப்பட்டார்.
நீக்கம் செய்யப்பட்ட ரூசெப் பிரேசிலின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார்.
ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்ட டில்மா ரூசெப் 8 ஆண்டுகள் வரை எந்த ஒரு அரசுப் பதவியும் வகிக்கக் கூடாது என பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
ரூசெப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றதுக்கு வெளியே கண்ணீர் மல்க நின்றிருந்தனர்.
முன்னதாக பிரேசில் வரவு செலவு கணக்கில் தில்மா ரூசெப் போலியான புள்ளி விவரங்களைப் பதிவு செய்து நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது என்று நாடகமாடியதாக புகார்கள் எழுந்தன.
இதனை ஒட்டி பிரேசில் பாராளுமன்றத்தில் ரூசெப் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.
ரூசெப் ஆட்சி காலத்தில் பிரேசிலில் வேலையின்மை, பொருளாதாரத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ரூசெப் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து பிரேசிலின் தற்காலிக ஜனாதிபதியாக 75 வயதான மைக்கேல் டேமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2011-ல் அந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தில்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2015-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அவர் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
0 comments: