Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இராணுவத்தை விலக்க வேண்டும்

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இராணுவத்தை விலக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய வட மாகாண முதல்வர், “இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கைப் பராமரித்து, மக்களின் பாதுகாப்புப் பணிகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் காவல் துறையினரே மேற்கொள்ள வேண்டுமென்று தான் அங்கேயுள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள், எனவே இராணுவம் அவசியமில்லை” என்று கூறியிருந்தார்.
ஆனால் முதல்வரின் இந்தக் கோரிக்கையை அங்கேயுள்ள இராணுவம் முற்றிலுமாக நிராகரித்து, தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெற முடியாது என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கு தீப்பிடித்து பெரிய சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதுபற்றி இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “சலாவ இராணுவ வெடி மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தால் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இராணுவத்திற்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு உண்டாகியுள்ளது. இந்த விபத்திற்குப் பிறகு, வடக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள இராணுவம் மற்றும் இராணுவ ஆயுதக் கிடங்குகளை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை அனைத்து தரப்பிலுமிருந்து எழுந்துள்ளது.
இதுகுறித்து கண்டியில் உள்ள பௌத்த மதத் தலைமைப் பீடத்திற்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்கிரி மாநாயக்கதேரரிடம் ஆலோசனைகள் பெற்றேன். அப்போது அவர் இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது என்று கூறினார். ஆகையால் வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது” என்று, அவர் தெரிவித்திருப்பது தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போன்ற தீராத வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு இலங்கைத் தீவில் நடைபெற்ற தேர்தலில் ஈழத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கை எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக, அவர்களிடம் வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, இராணுவம் அங்கே தொடர்ந்து இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மதத் தலைவரைக் கலந்து கொண்டா ஒரு அமைச்சர் அறிவிப்பது? அது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நியாயமான செயலாகுமா?
இலங்கை அரசு, ஈழத் தமிழர்களிடம் பாகுபாடு காட்டாமல் உள்ளது என்பதை நிரூபிக்க முதற்கட்டமாக தமிழர் பகுதிகளிலே இருந்து உடனடியாக இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு நம்பத்தக்க வகையில் நேர்மையோடு எடுக்க வேண்டும்.
தேர்தலின் போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. அதைக் காப்பாற்ற அவர்கள் வாய்மை உணர்வோடு முன்வருவதே ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் செயல். இதுவே உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் விருப்பம் வேண்டுகோள். இலங்கை அரசு அதை நிறைவேற்றுமா? இந்திய அரசு அதற்கு முன் நிற்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Post a Comment

0 Comments