Home » » மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி

மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகளை தீர்க்ககோரி இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையாளர்கள் சங்கங்கள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த கவன ஈர்ப்பு பேரணியானது மட்டக்களப்பு புதுப்பாலம் ஊடாக திருமலை வீதியை அடைந்து திருமலை வீதியூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு பேரணியின்போது கால்நடை பண்ணையாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்குமாறு கோரும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான், வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மத்திய அரசின்கீழ் உள்ள மகாவலிஅபிவிருத்தி சபை,வனவிலங்கு திணைக்களம்,வனவிலங்கு திணைக்களம்,வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான எல்லைப்பகுதிகளில் உள்ள அரச காணிகளில் சுமார் 175,000 கால்நடைகள் நீண்டகாலமாக இப்பகுதியை மேய்ச்சல் தரையாக பயன்படுத்திவந்த நிலையில் இந்த நிலப்பகுதியில் கடந்த காலத்தில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிவந்ததாகவும் ஆனால் அந்த பிரச்சினைகளுக்கு இதுவரையில் எதுவித தீர்வும் காணப்படவில்லையெனவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2011ஆம் ஆண்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் சுமார் 27ஆயிரம் ஹெக்டயர் காணிகளை மேய்ச்சல் தரையாக பிரகடனப்படுத்துமாறு மத்திய காணி ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் இதுவரையில் இது நிறைவேற்றப்படவில்லையெனவும் போராட்டத்தில் கலந்துகொண்ட கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேய்ச்சல் தரையாக இனங்காணப்பட்ட பகுதிகள் சிலவற்றை மகாவலி அபிவிருத்தி சபையும் வன இலாகாவும் தங்கள் அபிவிருத்தி பணிகளுக்காக வனவளர்ப்புகளை மேற்கொண்டுள்ள நிலையில் சில பகுதிகளில் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது இனங்காணப்பட்ட பகுதிகளை மேயச்சல் தரையாக பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும்,மட்டக்களப்பு மாவட்ட இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு நல்லின காளைகளையும் பசுக்களையும் பண்ணையாளர்களுக்கு வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும்,போக்குவரத்து பாதைகள் சீர்படுத்தவேண்டும்போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த பேரணியின்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,எஸ்.வியாழேந்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம்,மா.நடராஜா ஆகியோரும் கலந்துகொண்டதுடன் மகஜர்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்த கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.IMG_0035IMG_0058IMG_0067IMG_0069IMG_0072
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |