இலங்கையின் எந்த மாகாணத்திற்கும் இல்லாத புகழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதர் தெரிவித்துள்ளார்.
உலகில் எங்கும் இல்லாத அதிசயமான மட்டக்களப்பு வாவியில், மீன் பாடும் நிகழ்வு உள்ளதாகவும் அதனை நிரூபிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் அபிவிருத்தி திட்டங்களின் மைல் கல்லாக அமைக்கப்பட்டுள்ள மூன்று பொழுது போக்கு இடங்கள் நேற்று (20) மாலை திறந்து வைக்கப்பட்டது.
பிரின்ஸ் காசிநாதரின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நடைபாலம் மற்றும் ஏ.கெ.பத்மநாதன் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நடைபாதை, சிறுவர் பூங்கா என்பன இதன்போது திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை மற்றும் உள்ளூர் மக்கள் தமது பொழுது போக்கினை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு வாவியினை அண்மித்ததாக இந்த பூங்கா மற்றும் நடைபாதைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிபருமான பிரின்ஸ் காசிநாதரும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின் போது மட்டக்களப்பு கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட பாடல்களும் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







0 Comments