ஆசிரியர் டிப்ளோமா பயிற்சி முடித்த கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு கிழக்pகு மாகாணத்துக்கு வெளியே வழங்கப்பட்ட அனைத்து நியமனங்களும் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெளி மாகாணங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஆசிரியர்களை உடனடியாக கிழக்கு மாகாணத்திலுள்ள அவரவர் மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கல்வியமைச்சரைக் கேட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பாக புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான றவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் இன்று காலை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் விவாதித்தனர்.
அதன் பயனாக உடனடியாக அமுல் படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாணத்தவர்கள் அனைவருக்கும் கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே அவரவர் மாவட்டத்தில் நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்றவர்கள் உடனடியாக தங்களது விவரத்தை (நியமனக் கடிதப் பிரதி உட்பட கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்துக்கு அனுபபுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
முதலமைச்சரின் மாவட்ட இணைப்பதிகாரிகளையும் மேற்படி விடயமாகத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கையளிக்க முடியும்.


0 Comments