பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் இருவரை சுட்டுக்கொலை செய்தமை மற்றும் கைக்குண்டு தாக்குதல் நடத்தி எட்டுப் பேரை காயமடையச் செய்தமை தொடர்பில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் உள்ள குறித்த நபரின் வீட்டில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர் நாகமணி ஜெகதீஸ்வரன் என்னும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் 2003ஆம் ஆண்டு சித்திரை மாத காலப்பகுதியில் ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றின் நிகழ்வுக்கு சென்ற இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் ஆரையம்பதி பிரதேசத்தில் கைக்குண்டு தாக்குதல் நடாத்தி எட்டுப் பேரை காயப்படுத்தியமை தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் ஆரையம்பதி பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் தற்போது திருமணம் செய்து மகிழடித்தீவில் வாழ்ந்து வருவதாகவும் இவர் நீண்ட காலமாக மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று விட்டு தற்போது திரும்பி வந்த நிலையிலேயே நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வு துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப் பட்டவர் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை பூர்த்தி யானதும் நீதிமன்றில் ஆஜ ர்படுத்தப்படுவர் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


0 Comments