உலகக்கோப்பைக்கு பிறகு சங்கக்காரா ஓய்வு பெறக் கூடாது என்று அவரிடம் தான் மண்டியிட்டுக் கேட்டுக் கொள்வதாக இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் கூறியுள்ளார்.
2015 உலகக்கோப்பை முடிந்த பிறகு சங்கக்காரா ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். சங்கக்காராவுக்கு வயது 37 என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ஏகப்பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சங்கக்காரா. இலங்கையின் சிறந்த பேட்ஸ்மென்/விக்கெட் கீப்பர் என்ற பெயரையும் சங்கக்காரா தட்டிச் சென்றுள்ளார், கிரிக்கெட் ஆட்டத்தின் சிறந்த தூதர் சங்கக்காரா என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு உலகக்கோப்பையில் 496 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் அவரது ஓய்வு இலங்கை கேப்டன் மேத்யூஸை உணர்வு ரீதியாக பாதித்துள்ளது, “நான் அவரிடம் மண்டியிட்டு கேட்டுக் கொள்கிறேன் ஓய்வு பெற வேண்டாம் என்று. ஆனாலும் அவரது ஆசையையும், முடிவையும் பெரிதும் மதிக்கிறேன். நாட்டுக்காக அவர் ஒவ்வொரு முறை சிறப்பாக ஆடியதற்கு அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.” என்றார் மேத்யூஸ்.
இந்நிலையில் தனது முடிவில் மாற்றமில்லை என்று கூறிய சங்கக்காரா, “ஓய்வு பெறுவது என்பது ஒருவரது ஃபார்ம் தொடர்பான விஷயமல்ல. சரியான உணர்வு மற்றும் கால நேரமே ஓய்வை தீர்மானிக்கும். நாம் விளையாட முடியுமா அல்லது இல்லையா என்பது பற்றியது அல்ல ஓய்வு முடிவு என்பது.” என்றார்.
0 Comments