போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த பெண்ணொருவரை விமானநிலைய குற்றப்புலானய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொத்துவிலைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொத்துவிலைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர், தனது உண்மையான கடவுச்சீட்டு மற்றும் மாலைத்தீவுக்கு செல்வதற்கான பயணச்சீட்டு ஆகியவற்றை கருமபீடத்தில் கையளித்து பயணிப்பதற்கு தேவையான ஆவணங்களை பெற்று குடிவரவு, குடியகல்வு பிரிவுக்குச் சென்று மாலைதீவுக்கு செல்வதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் இருக்கின்ற கடைசி கருமபீடத்தில், தான் டுபாய் ஊடாக இத்தாலி செல்வதற்கு வருகை தந்ததாக தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் பிறிதொரு கடவுச்சீட்டையும் காண்பித்துள்ளார்.
அதன்பிரகாரம் அவர், எமிரேட்ஸ் விமானசேவைக்கு சொந்தமான ரி.கே.653 இலக்க விமானத்திலேயே டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயற்சித்துள்ளார்.
இதன்போதே, அதிகாரிகள் சந்தேகம் ஏற்பட்டு அப்பெண்ணை கைதுசெய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இத்தாலியில் வசிக்கின்ற இலங்கைப் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த பெண்ணின் படத்தை பயன்படுத்தி போலியான கடவுச்சீட்டு மற்றும் தேவையான ஆவணங்களை தயாரித்து அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
போலியான ஆவணங்களை தயாரிப்பதற்காக சந்தேகநபரான அந்த பெண், கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபரான அந்த பெண்ணை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments