கிழக்கு மாகாண சபையைப் பொருத்தமட்டில் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் பல விவாதங்கள் இடம்பெற்றன இடம்பெறுகின்றன. ஆனால் எமது உரிமைகளையும் தனித்துவத்தினையும் விட்டுக் கொடுக்காமலேயே இந்தப் பதவிகளைப் பெற்றோம். நாம் எவரிடமும் கெஞ்சிக் கேட்டு பதவிகளைப் பெறவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்திற்கு பொருட்கள் புதன்கிழமை வழங்கி வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
பிரிக்கப்படாத தீவில் எமது தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படாத சமஸ்டி முறையிலான தீர்வு இந்த அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிலை ஏற்பட்டால் நாம் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படலாம் என்பதே எமது தலைவர் சம்மந்தன் ஐயாவின் கொள்கை.
இந்த மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் போராட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்டது. இது எமது மக்களுக்கான மாகாண சபை எமது மக்களின் இளைஞர்களின் உயிர் உடமைகளை இழந்த எமக்கு இந்திய அரசின் அனுசரணையுடன் தோற்று விக்கப்பட்டதே இந்த மாகாண சபை முறைமை.
எமது மக்கள் சிந்திய இரத்தத்தின் மூலம் தோற்று விக்கப்பட்ட மாகாண சபையை இன்னுமொரு சமுகம் அனுபவித்து வருவதும் எம்மை அதிலிருந்து புறம் தள்ளுவதும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
நாம் இந்த மாகாண சபையில் போட்டியிட்டது வெறுமனே அபிவிருத்திக்காகவோ அல்லது அரசு அமைப்பதற்காகவோ அல்ல எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மீது வைத்திருக்கின்ற பற்றுதலை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2012ம் ஆண்டு தேர்தலில் நாம் போட்டியிட்டோம்.
கடந்த மஹிந்த அரசின் நெருடலுக்குள் எமது மக்களால் எமக்கு பூரண ஆதரவைத் தர முடியாமல் முடக்கப்பட்டிருந்த காலத்திலும் எமது மக்களால் நாம் தெரிவு செய்யப்பட்டோம். இவ்வாறான நிலையில் அப்போதிருந்த அரசு அவர்களது பக்கமும் தமிழர் ஒருவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டார் என்பதைக் காட்ட சூழ்ச்சி மூலம் சந்திரகாந்தனைத் தெரிவு செய்தனர்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பேணுகின்ற அரசில் பெரும்பாண்மை அங்கத்தவர்களைப் பெற்ற கட்சியே ஆட்சியமைப்பது வழமை ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொருத்த மட்டில் எந்தவொரு இனமும் தனித்து ஆட்சி அமைப்பது என்பது முடியாத விடயமே.
மத்தியில் புதிய ஆட்சி மாற்றம் இடம்பெற்றதுடன் கிழக்கில் ஏற்படவிருந்த ஆட்சி மாற்றத்தில் தமிழர் முதலமைச்சராக வரக்கூடாது அதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து முதலமைச்சர் ஒருவர் வருவதைத் தடுக்க வேண்டும் என்ற சூழ்ச்சியே கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் விடயத்தில் இடம்பெற்றது. இதற்கு முக்கிய காரண கர்த்தாக்களாக சோரம் போன எமது மாகாணத்தின் எட்டப்பர்களே இருந்தார்கள். அவர்களின் சூழ்ச்சியினாலேயே நாம் ஏமாற்றப்பட்டோம்.
இருப்பினும் எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த மாகாண சபை ஆட்சியில் இணைந்தோம். இருப்பினும் நாம் அவர்களிடம் எதனையும் கெஞ்சிக் கேட்கவில்லை. மிஞ்சியே எமது வாதத்தினை முன்வைத்தோம்.
எமது உரிமைகளையும் தனித்துவத்தினையும் விட்டுக் கொடுக்காமலேயே இந்தப் பதவிகளைப் பெற்றோம். இவை நாம் விரும்பிப் பெறவில்லை காலத்தின் கட்டாயத்தால் பெறப்பட்டவையே.
கிழக்கு மாகாண சபை அம்ர்வு தொடர்பில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. மூன்று மாவட்டங்களிலும் விகிதாசார முறையில் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் தான் நாம் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம்.
நாம் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திற்காகவே இந்த பதவிகளை ஏற்றுள்ளோம். எம்மால் அவ்வாறு செய்ய முடியாது விடின் அந்த பதவிகளையும் துறக்கத் தயங்க மாட்டோம் என்றார்.
0 Comments