மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ள பொது எதிர்க்கட்சி முன்னணியின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரதானமாக நான்கு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ள.
இந்த ஒப்ந்தத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என சுமார் 35 மேற்பட்ட இயக்கங்கள் கைச்சாத்திட்டுள்ளன. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தத்தின் முழுமை:
இலங்கையர்கள் என்ற வகையில் நாம் பாரதூரமான சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். பல தசாப்தங்களுக்கு முன்னர் உலகத்தின் சிறந்த முன்னுதாரணமான ஜனநாயக நாடாக இலங்கை ஏற்றுக் கொள்ளப்படடு இருந்தது. ஆனால், இன்று மிகத் துரிதமாக, இலங்கையில் வாழும் பிரஜைகள் கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இத்துன்பியல் நிலைமை பின்வரும் காரணங்களால் ஏற்பட்டுள்ளது.
•சட்டத்தின் ஆட்சி முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளமை,
•ஆட்சிக்கு அத்தியாவசியமான ஜனநாயக நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டுள்ளமை,
•சமூக சமத்துவமின்மை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து, சமூக அநீதி சமூக முறைமையின் அடிப்படைக் குணாம்சமாக மாறி உள்ளமை,
•பல்வகை இனத்துவ மத குழுக்களுக்கிடையே சகவாழ்வு வீழ்ச்சியடைந்து ஒற்றுமையீனமும் நம்பிக்கையீனமும் வியாபித்துள்ளமை.
இந்நிலைமையை கவனத்தில் எடுத்து நாட்டில் மீண்டும் நல்லாட்சியையும், சமூக நீதியையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்கு பின்வரும் நிகழ்ச்சித்திட்டம் முன்வைக்கப்படுகிறது.
அதற்கமைய தற்போதைய ஜனநாயக விரோத, ஏகபோக, ஊழல் மிகுந்த, ஆட்சியந்திரத்தை தோல்வியுறச் செய்து மேற்கூறிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எல்லோரும் இணங்கக்கூடிய பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டுவதற்கும் அதன் பின்னர் 100 நாட்களுக்குள் குறுகிய கால வேலைத்திட்டத்தை அமுலாக்குவதற்கும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து பாராளுமன்ற ஆட்சியை அமைத்து, புதிய பாராளுமன்றத்தின்கீழ் ஏனைய குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும், இதன்மூலம் முன்;மொழியப்படுகிறது.
அதேசமயம், பின்வரும் உடனடி நடவடிக்கைகளையும் இலக்குகளையும் வெற்றிகொள்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்குள் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும்.
உடனடிக் குறிக்கோள்கள்:
1.தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் முழுமையாக இல்லாதொழித்து, மக்களுக்கு வகைப்பொறுப்புக் கூறும் பாராளுமன்ற முறைமையை ஸ்தாபித்தல். புதிதாக உருவாக்கப்படும் பாராளுமன்ற ஆட்சியில் ஜனாதிபதி அரசின் தலைவராக செயற்படுவதோடு, ஜனாதிபதிப் பதவிக்கு அதற்கேற்ற வகையில் வகைப்பொறுப்பும், அதிகாரங்களும் வழங்கப்படும். ஜனாதிபதிப் பதவியை நாட்டின் தேசிய ஐக்கியச் சின்னமாக ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
2.அரசியலமைப்பிற்கான 18ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்படும். ஜனநாயக ஆட்சி முறைக்கு அத்தியாவசியமான நீதித்துறை, பொலிஸ்சேவை, அரசசேவை, தேர்தல் அதிகாரிகள், சட்டமாஅதிபர், கணக்காய்வாளர்நாயகம் போன்ற பதவிகள் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆணைக்குழுக்களின் சுயாதிபத்தியத்தை மீண்டும் ஏற்படுத்தி வலுப்படுத்துதல்.
3.விகிதாசாரத் தேர்தல் முறை முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டு, சகல தேர்தல் தொகுதிகளிலும் தமக்கொரு பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்கும் வகையில் சகல மக்கள் பிரிவினரது, அரசியல் கருத்துக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், பழைய பாராளுமன்றத் தேர்தல் முறையினதும், விகிதாசார முறையினதும் கலவையாகப் புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படும்.
4.மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய வாழ்க்கைச் சுமையை இலகுபடுத்துவதற்கு, வாழ்க்கைச் செலவுப் படிக்கு ஏற்ப, அரச மற்றும் தனியார்துறையில் விபரமான சம்பளத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பொருளாதாரத்தின் கைத்தொழில், விவசாயம், பெருந்தோட்ட, மீன்பிடி, சிறு கைத்தொழில்கள் போன்ற துறைகள் வலுவூட்டப்படும். உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்துதல். சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள வறிய மக்களை, குறிப்பாகப் பெண்கள், பிள்ளைகள், மூத்தோர், ஓய்வூதியம் பெறுவோர், ஊனமுற்றோர் ஆகிய அனைத்துப் பகுதியினரையும் இலக்காகக் கொண்டு விசேட வலுமிகுந்த சமூகப் பாதுகாப்புவலை ஒன்று ஸ்தாபிக்கப்படும்.
இதற்கு மேலதிகமாக உத்தேச 100 நாட்களுக்குள் பின்வரும் இலக்குகளை வெற்றிகொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்படும்.
•முன் எப்போதும் இல்லாத வகையில் நிகழும் பாரிய அளவிலான மோசடிகள், ஊழல்கள், இலஞ்ச நடவடிக்கைகள், கொமிஷன் வாங்குதல் என்பவற்றை ஒழிக்கவும், பொதுமக்களின் பணம் வீண்விரயமாக்கப்படும் துஷ;பிரயோகங்களைத் தடுப்பதற்கும் இறுக்கமான வெளிப்படைத் தன்மையும், வகைப்பொறுப்பும் கொண்ட ஒரு வழிமுறையை உருவாக்குதல். அதேசமயம், ஏற்கனவே நடைமுறையிலுள்ள துஷ;பிரயோகங்களையிட்டு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்தல்.
•சட்டத்தின் ஆட்சிக்கு முன்னுரிமை வழங்குதல், நல்லாட்சியின் கீழ் நிலைபேறான அடிப்படையில் ஜனநாயகத்தை மீள ஸ்தாபித்தல், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்து மேம்படுத்தல், ஊடகச் சுதந்திரம் மற்றும் தகவல்களைப் பெறும் உரிமை உட்பட கருத்துக்களை வெளியிடும் உரிமையை உறுதி செய்தலும் மனித கௌரவத்துடன் வாழ்வதற்குள்ள உரிமையை உறுதி செய்தல்.
•எல்லோரும் மனித கௌரவத்துடன்; வாழக்கூடிய உரிமையை மேலும் வலுவூட்டுவதற்காக நலன்புரி அரசை மீண்டும் ஸ்தாபித்தல். விசேடமாக உயர்மட்டத்தில் இலவசக் கல்விக்கும், இலவச சுகாதாரச் சேவைக்கும் சகல பிரஜைகளுக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்தல்.
•துரிதமாக மாற்றமடையும் உலகச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய வகையில் இளம் பரம்பரைக்கு வலுவூட்டுதல். குறிப்பாக உயர்மட்ட தொழில்வாய்ப்புகளுக்கு இளைஞர் சமுதாயத்தைத் தயார்படுத்த அவசியமான தொழிநுட்ப அறிவையும் ஏனைய திறன்களையும் பயிற்சியையும் வழங்குதல்.
•சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடனும், சமசந்தர்ப்பத்துடனும் வாழ்வதை உறுதிசெய்தல்.
•நாகரீகமான /நெறிமுறைசார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கும், விசேடமாக அறிவு துரித வீழ்ச்சியை அடைந்துள்ள எமது நாட்டில் சிறந்த அரசியல் கலாசாரத்தை மேம்படுத்தல்.
மேற்கூறிய பொதுமக்கள் நிகழ்ச்சி நிரலை அமுலாக்குவதற்கு எம்மை அர்ப்பணிப்போம் என கீழே கையொப்பமிடும் அரசியல் கட்சிகள், அரசியல் குழுக்கள் மற்றும் பிரஜைகள் அமைப்புக்களுடன் இணைந்து திடசங்கற்பத்துடன் சபதம் செய்கிறோம்.

.jpg)
0 Comments