முல்லைத்தீவு வட்டுவாகல் நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த 5 நாட்களாக மீன்கள் இறந்து கரையொதுங்கி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரை சுமார் 60 000 kg இற்கும் மேற்பட்ட சிறிய வகை மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன. இன்று அப்பகுதிக்கு நேரில் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமையை நேரில் அவதானித்ததோடு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
முன்பு சுமார் 4, 5 m ஆழமாக இருந்த இப்பகுதி, சுனாமியின் பின்னர் ஆழம் வெகுவாக குறைவடைந்து விட்டது.வெய்யில் அதிகமாக , நீர்ப்பரப்பில் உப்பின் செறிவு அதிகரித்ததாலும்,நீரில் ஒட்சிசன் சார்பு அளவு குறைவடைந்ததாலுமே இவ் அனர்த்தம் நேரிட்டதாக மக்களின் தகவல்களில் இருந்து தெரியவருகிறது.
வட்டுவாகல் கிராமிய கடற்றொழில் அமைப்பால் கரையொதுங்கிய மீன்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது தொடர்பிலான நிலைமைகளை அமைச்சர் டெனீஸ்வரன் அவர்களுக்கு தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளேன் .
மேலும் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் அவர்களை தொடர்புகொண்டு உரையாடினேன். அவரின் தகவல்களின் படி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று “தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி அபிவிருத்திக்கான நிறுவனம்” பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்துச் சென்றதாகவும் முடிவுகள் ஒரு வாரத்திற்குள்ளாக தெரியவரும் என்று அறியமுடிகிறது என்றார்.
0 Comments