தமிழர் தாயகத்தில் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கும் நோக்கத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எதிர்வரும் 7ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மாவை சேனாதிராஜா, கட்சித் தலைமையின் கோரிக்கைக்கு இணங்க, தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக நான் பதவியேற்க சம்மதித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு அடுத்த மாதம் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் இரா.சம்பந்தன் தனது தலைமைப் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.
அதையடுத்து தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அடுத்த தலைவராக நியமிப்பதற்குரிய முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இது தொடர்பில் மாவை.சேனாதிராஜாவிடம் நேரடியாகக் கேட்டபோது, கட்சித் தலைமையின் கோரிக்கைக்கு அமைவாக நான் தலைமைப் பொறுப்பை ஏற்கின்றேன் என்று குறிப்பிட்டார்.
‘எமது கட்சிக் கிளைகள் வடக்குக் கிழக்கு முழுவதும் மீளவும் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் 34 கிளைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. சகல இடங்களிலும் புதிதாக இளைஞர்கள் பலர் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
கட்சியின் மாநாட்டின் முக்கிய பிரகடனமாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு குறித்த கால அவகாசத்தை வழங்கி அந்தக் காலப்பகுதியினுள் எமது பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால், வடக்குக் கிழக்குத் தாயகம் முழுவதும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பது என்ற விடயம் அமையும்.
வடக்கின் நில அபகரிப்பு, வடக்கில் பெண்கள் மீதான துஷ்பிரயோகம், தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இனஅழிப்பு தொடர்பான விடயங்கள் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்படும்’ எனவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.
அதேவேளை அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டுக்கு இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கிய வெளியுலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கட்சியின் பொதுச்செயலாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த சட்டத்தரணியும் மாகாண சபை உறுப்பினருமாகிய கி.துரைராஜசிங்கம் நியமிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments