கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கல்முனை உவெஸ்லியன் 1978/82 பழைய மாணவர் அமைப்பின் தலைவர் வ.ஜீவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பொன்னையா சுவர்ணராஜா பிரதம அதிதியாகவும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் முன்னாள் கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற ஆணையாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல், கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வே.மயில்வாகனம், பொறியியலாளர் யூ.எல்.ஏ நஸார், வைத்திய கலாநிதி எஸ்.ரமேஷ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் "நினைவுக்குள் நிதம்" எனும் சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. கல்லூரி அதிபர் வடிவேல் பிரபாகரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் சிறப்புரையாற்றினர். அத்துடன் கல்லூரிக்கு ஆற்றி வருகின்ற சேவைகளுக்காக கல்முனை உவெஸ்லியன் 1978/82 பழைய மாணவர் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அதேவேளை கல்லூரியின் பழைய மாணவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான பெஸ்டர் றியாஸ் ஐம்பது ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரனங்ககளை இதன்போது கல்லூரிக்கு அன்பளிப்பு செய்தார்.
கல்முனை உவெஸ்லியன் 1978/82 பழைய மாணவர் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், கல்விமான்கள், பல்லின முக்கியஸ்தர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர். கல்முனை உவெஸ்லியன் 1978/82 பழைய மாணவர் அமைப்பினரின் 17 இலட்சம் ரூபா நிதியில் கல்லூரிக்கான பிரதான நுழைவாயில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments: