இலங்கைக்கு கடந்தவாரம் பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா ஏமாற்றத்துடன் திரும்பியதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதிகளவு எதிர்பார்ப்புடனும் முழுமையான நம்பிக்கையுடனும் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ரமபோசா, இலங்கை அரச தரப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களின் பின்னர், ஏமாற்றத்துடனும், வெறுப்புடனும் நாடு திரும்பியதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதியுடன் நடத்திய நீண்ட பேச்சுக்களின் போது, சிறில் ரமபோசா, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
|
ஆனால், மகிந்த ராஜபக்சவோ, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால், சிறில் ரமபோசா, துயரத்தை வெளிப்படுத்தியவாறே அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
அதேவேளை, தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி சிறில் போசா இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணம் திருப்தி அளித்துள்ளதாக, அவரது பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, உண்மையை கண்டறிந்து நல்லிணக்கம் செய்யும் ஆணைக்குழு தொடர்பான தங்களின் முழுமையான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த ஆணைக்குழுவை நியமிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தென்னாபிரிக்கா வற்புறுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் அனுபவ பகிர்வின் ஊடாக, இலங்கை அரசாங்கமே இதனை நிறுவுவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
0 Comments