அம்பாறை மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெற இடமளிக்க முடியாது. இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென இராணுவத்தின் 241 ஆவது படையணியின் பிராந்திய கட்டளைத்தளபதி கேணல் பிரியங்க கமகே தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச பள்ளிவாயல்களின் தலைவர்கள், மௌலவிமார்கள், மதத்தலைவர்கள் ஆகியோர்களுக்கிடையில் அம்பாறை மாவட்டத்தில் சமாதானத்தை வலியுறுத்தி பாலமுனை இராணுவ முகா மில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற கலந்துறையாடலின் போதே கட்டளைத்தளபதி கேணல் பிரியங்க கமகே இதனைத் தெரிவித்தார்.
கட்டளைத்தளபதி கேணல் பிரியங்க கமகே தொடர்ந்து உரையாற்றுகையில்:
அம்பாறை மாவட்டத்தில் எந்த சமூகத்திற்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படுவதற்கு நான் இடமளிக்கமாட்டேன். ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அவரவர்களுடைய கலாசார விழுமியங்கள் உண்டு. அதை நாம் ஒவ்வொருவரும் கட்டிக்காக்க வேண்டும்.
பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதாலோ, டயர்களை எரிப்பதனாலோ எதனையும் சாதித்துவிட முடியாது. இப்பிராந்தியங்களில் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் எங்களுக்கு உடன் அறிவியுங்கள் உங்களை பாதுகாப்பது எங்களது கடமையாகும்.
நாட்டின் நிரந்தர சமாதானத்திற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படுவோமானால் இலகுவாக எமது சமாதான இலக்கை அடையமுடியுமென்றார்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள பௌத்த ஆலயங்களிற்கும் சிங்களப் பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயல்களிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென இங்கு வலியுறுத்தப்பட்டது.
0 comments: