மட்டக்களப்பு, குருக்கள் மடம் பகுதியில் வைத்து கடந்த 1990ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் இடத்தினை எதிர்வரும் முதலாம் திகதி தேண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றம் நேற்று களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றியாழினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற 165 பேர் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதுடன் இவர்கள் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு புதைக்கப்பட்டவர்களின் சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காத்தான்குடி நகர சபை உறுப்பினர் மஜீத் ஏ றவூப் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 22.4.2014ஆம் திகதி முறைப்பாடு செய்தார்.
தனது உறவினர்கள் இருவர் இதில் கடத்திக் கொல்லப்பட்டு இருப்பதாகவும் அவர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இதையடுத்து களுவாஞ்சிகுடி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று திங்கட்கிழமை(23) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகர சபை உறுப்பினர் மஜீத் ஏ றவூப், தனது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தினை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அடையாளப்படுத்தியதாக தெரிவித்தார்.
பொலிஸார் கேட்டுக்கொண்டதற்கிணங்கள எதிர்வரும் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை உரிய இடத்தினை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு நீதவான் றியாழ் உத்தரவிட்டார்.
0 Comments