இலங்கையில் சுவிசேசம் பரப்புவதற்காக வந்த மேற்குலக அருட்பணியாளர்கள் கல்வியையும் காத்திரமான முறையில் பரப்பினர். அன்ன சத்திரம் யாவினும் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று பாரதி பின்னாளில் பாடியதை அவர்கள் அன்றே உணர்ந்து கொண்டனர். எனவே, மிஷனரிமார் கல்விச் சாலைகளை நிறுவினர்.
இலங்கையின் தேசாதிபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சேர் றொபேட் பிரௌன்றிக் (1812–—-1820) கிழக்குப் பகுதியிலும் பாடசாலைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை வந்திருந்த மெதடிஸ்த மிஷனரிமாரைப் பணித்தார். வண. ஜோஜ் தலைமையில் இங்கிலாந்து போட்ஸ் மௌத் துறைமுகத்திலிருந்து 1813 டிசம்பர் 30 ஆம் திகதி புறப்பட்ட குழுவினரே இவர்கள். இக்குழுவுக்குத் தலைமை தாங்கிய வண. ஜோஜ் வரும் வழியில் படகில் மரணமானார். மட்டு. மத்திய கல்லூரி தாபகர் வண. வில்லியம் ஓல்ட் பாதிரியாரும் மனைவியுடன் இக்குழுவினருடன் புறப்பட்டிருந்தார். 1814 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அவரின் இளம் மனைவியும் நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிர் துறந்தார். கடல் பயணம் உடல் நிலைக்கு சாதகமாக அமையவில்லை. இறந்த இருவரின் உடல்களும் வேறு வழியின்றி கடலிலேயே அடக்கம் செய்யப்பட்டன. எஞ்சியோர் 1814 யூன் 29 இல் காலி துறைமுகத்தை வந்தடைந்தனர். துண்டு குலுக்கப்பட்டு வில்லியம் ஓல்ட் மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டார்.
இங்கு வந்த அவர் அரச களஞ்சியசாலையில் 5 மாணவர்களுடன் ஒரு பாடசாலையை தாபித்தார். பிரித்தானிய இராணுவத்தினரின் 3 அநாதைக் குழந்தைகளும் இ.தா. சோமநாதரும் நால்வராவர். சோமநாதர் பின்னர் கச்சேரியில் முதலியாராக பணிபுரிந்தார். 5 ஆவது சிறுவன் யார் என்று அறியப்படவில்லை. இளம் மனைவியை இடைவழி பயணத்தில் பிரிந்த துயர் நெஞ்சில் கனத்த நிலையில் அன்று அவர் ஆரம்பித்த பாடசாலை இலங்கையின் 1 ஆவது ஆங்கிலப் பாடசாலை என்று கூறப்படுகிறது. அப்பாடசாலை தான் மெதடிஸ்த மத்திய கல்லூரி என்று பெயர் பெற்று இன்று இருநூறாவது விழாவைக் கொண்டாடுகின்றது. வங்கக் கடலில் (வங்காள விரிகுடா) வங்கத்தில் (படகில்) முகத்துவாரத்தினூடே மட்டக்களப்பு வாவியுள் பிரவேசித்தார். பொது நூலகத்துக்கு முன்னால் தற்போது மட்டக்களப்பு வாயில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் 12.08.1814 இல் தரை இறங்கினார். இதனை நினைவு கூரும் வகையில் அதே இடத்தில் கையில் அரிக்கன்லாம்பு ஒன்றை கையில் ஏந்தியவாறு அன்னாரின் சிலையினை நிறுவி மெதடிஸ்த மக்கள் தமது நன்றியை வெளிப்படுத்தினர். கல்லூரியுடன் இணைந்ததாகவுள்ள மெதடிஸ்த தேவாலயத்துக்கு அருகே மண்டபம் ஒன்றை நிறுவி அதற்கு வில்லியம் ஓல்ட் நினைவு மண்டபம் எனப் பெயரிட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் அதாவது புளியந்தீவு எனப்படும் மையப்பகுதியில் மிஷனரிமாரால் நிறுவப்பட்ட 4 பாடசாலைகள் உள்ளன. மெதடிஸ்த மத்திய கல்லூரி, வின்சன் மகளிர் உயர்தர தேசியப் பாடசாலை இவை இரண்டும் சகோதரப் பாடசாலை என்று கூறப்படுகின்றன. மெதடிஸ்த மிஷனரி மாரால் இவை நிறுவப்பட்டமையே அதற்குக் காரணம். ஆண் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 1837 இல் பெண்களும் பயின்றுள்ளனர்.
இதேபோன்று, கத்தோலிக்க மிஷனரிமாரால் இன்று புனித மிக்கேல் கல்லூரி (ஆண்) புனித சிசிலியா மகளிர் தேசியப் பாடசாலை என்ற பெயருடன் விளங்கும் இரு பாடசாலைகளும் தாபிக்கப்பட்டன. இவை இரண்டும் மற்றைய சகோதரப் பாடசாலைகளாகும்.
1815 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வில்லியம் ஓல்ட் பாதிரியார் இவ்வுலக வாழ்வை நீத்தார். 9 மாதங்களே அவர் இங்கு வாழ்ந்தாலும் அன்னாரின் புகழ் மீன் பாடும் தேனாடு உள்ள வரை நிலை பெற்றிருக்கும். 1839 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஸ்ரூவர்ட் மக்கன்சி இலங்கையின் தேசாதிபதியாகப் பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலத்தில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது இப்பாடசாலைக்கு பணம் மற்றும் கட்டடப் பொருட்களையும் வழங்கினார். வண. ஹோல் என்பவர் இவற்றைக் கொண்டு புளியந்தீவு மெதடிஸ்த தேவாலயத்தின் இரு புறமும் விறாந்தைகளை அமைத்து அதில் பாடசாலையை நடத்தினார். இது மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாகும்.
இங்கு இடம் போதாமலிருந்ததால் ஓலைக்கொட்டில் ஒன்று அமைக்கப்பட்டது. 1859 இல் பூர்த்தியான இக்கட்டடத்துக்கு 350 பவுண் செலவாயிற்றாம். இவ்வாறாக பாடசாலை வளர்ச்சி பெற்றது. இப்பாடசாலையின் முதலாவது பரிசளிப்பு விழா 1876 ஆம் ஆண்டில் நடந்துள்ளது. 1917 ஆம் ஆண்டில் இங்கு காரணிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரிக்கான இலச்சினை இங்கு ஆசிரியராக கடமையாற்றிய சோமநாதர் என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும். இலச்சினையின் அடிப்பகுதியில் பரந்த சமுத்திரமும் அதன் பின்னணியில் கதிரவனும் இடது மேற்பகுதியில் புத்தகமும் புத்தகத்தின் மேல் பறக்கும் புறாவும் வலது மேல் பகுதியில் தென்னை மரமும் அமைந்துள்ளன.
கதிரவன் ஒளிவீசி சமுத்திரத்தின் மேற்பகுதியை பிரகாசிப்பது போல கல்லூரி மாணவர்கள் மூலம் ஒளி வீசி நாட்டு மக்களின் அறியாமையைப் போக்க வேண்டும். மத்திய கல்லூரி மாணவன் ஜீவ புத்தகத்தினை விரும்ப வேண்டும். வாழ்வை வேதாகமத்தின்படி நெறிப்படுத்த வேண்டும். கற்றலும் சிந்தனையும் பாவத்துக்கும் தவறுகளுக்கும் வழி நடத்தாமல் இருப்பதை புறா அறிவுறுத்துகின்றது. தென்னை கிழக்கு கரையின் சிறப்பை நினைவு படுத்துவதுடன் நமது வளர்ச்சி உயர்ந்ததாகவும் நேரானதாகவும் இருக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்துகின்றது. தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன் தருவது போல கல்லூரி மாணவன் நேர்மையானவனாக மாத்திரமன்றி அவனின் சுற்றம் ஒவ்வொன்றும் தன்னைச் சூழ வாழும் மனித சமுதாயத்துக்கு சுய நலம் அற்ற சேவையினை ஈந்து பயன் தருவனவாய் இருக்க வேண்டும். அறியாமை என்னும் கடலின் மேலாக தென்னை, புறா, புத்தகம், உதய சூரியன் இவற்றினைப் போன்று நாம் வாழ்ந்து செயற்பட்டால் தான் நாம் நற்பிரஜைகளாக வளர்ந்து பிரகாசிக்கலாம். நாம் இவ்வுலகிற்கு கதிர் வீசும் ஒளி எல்லா ஒளிகளுக்கும் மூலமாயிருக்கும் இறைவனின் ஒளியில் இருந்து தெறிக்காவிட்டால் அதனால் பயனில்லை. பரந்த உணர்வுடன் நோக்கும் போது இவைகளெல்லாம் ஒன்று சேர்ந்து எமது இலச்சினையின் அடியில் பொறிக்கப்பட்டிருக்கும் உமது ஒளியில் நாம் வெளிச்சம் காண்போம் என்னும் மகுட வாக்கியத்தின் கருத்தினைக் காட்டுகின்றது. இவ்வாறு அந்த இலச்சினைக்கு பொருள் கூறப்பட்டுள்ளது.
ஜெயகேசரி, இளைஞன், யுவன், பரணி விஞ்ஞானி, செம்மை போன்ற மாத சஞ்சிகைகளை கையெழுத்து அச்சு பிரதிகளாக மாணவர்கள் அவ்வப்போது வெளியிட்டுள்ளனர். எனினும் 1946 இல் வெளியிடப்பட்ட சென்றலைட் என்பதே 1ஆவது சஞ்சிகையாகும். இக்கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு விழா ஏ.ஏ. அருளன்னராசா அதிபரின் காலத்தில் 1989 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. மத்திய தீபம் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டதுடன் 75 சதம் பெறுமதியான நினைவு முத்திரையும் அதே ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இக்கல்லூரிக்கு விதையாகி உரமானவர் வில்லியம் ஓல்ட். கல்வி மற்றும் புறக்கிருத்திய நடவடிக்கைகளில் இக்கல்லூரி சாதனை புரிந்துள்ளது. 23 க்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் அமைச்சர்களாகவும் பாராளுமன்றத்தை அலங்கரித்துள்ளனர். அதிபர்களாக ஏற்கனவே 36 பேர் பணி புரிந்துள்ளனர். இவர்களில் 28 பேர் மேற்கு நாட்டினராவர். வண.ஜி.ஹொலே தொடக்கம் வண.ஜி.ஏ.ஸ்மித் வரைக்குமான 28 பேருள் 27 பேர் வணக்கத்துக்குரியோராவர்.
இரு நூற்றாண்டு கடந்த மே மாதம் 29 ஆம் திகதி வாகன ஊர்தி ஊர்வலத்துடன் ஆரம்பமானது. நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. நதளை 29 ஆம் திகதி இருநூறாவது விழா நடைபெறவுள்ளது. காலை புளியந்தீவு மெதடிஸ்த தேவாலயத்தில் விசேட ஆராதனை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து வில்லியம் ஓல்ட் பாதிரியாரின் சிலை முன்பாக இருந்து கல்லூரி மண்டபம் வரை ஊர்வலமும் நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். நினைவு முத்திரை ஒன்றை பின்னர் வெளியிடவும் அதன் வெளியீட்டு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. யூன் 29 ஓல்ட் காலியில் கால் பதித்த நன்னாள்.
0 comments: