மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஆலயத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு 12.30மணியளவில் மண்டூர் வைத்தியசாலைக்கு முன்பாக இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது காக்காச்சிவட்டையை சேர்ந்த மகேந்திரன் விஜிதரன்(19வயது)என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மண்டூர் கணேசபுரம்,கண்ணகியம்மன் ஆலய திருடச்சடங்கில் கலந்துவிட்டு காக்காச்சிவட்டை நோக்கி சென்றவர்களும் மண்டூர் 14ஆம் வட்டாரத்தில் இருந்து ஆலயத்துக்கு வருகைதந்தவர்களும் இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்ததாகவும் இரு மோட்டார் சைக்கிள்களும் அதிக வேகத்துத்துடன் சென்றதாகவும் இதன் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை காயமடைந்த நான்கு பேரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதி சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோன்று உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments: