Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு புணானை மீள்குடியேற்றத்தில் சிங்கள மக்களுக்கு முன்னுரிமை: ததேகூ குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லையான புணானையில் மீள்குடியேற்றத்திற்கு புறம்பாக வெளி மாவட்டத்தை சேர்ந்த சிங்கள குடும்பங்களும் திட்டமிட்டு குடியேற்றப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.

அங்குள்ள இராணுவமும் பௌத்த பிக்குவும் வெளி மாவட்டத்தை சேர்ந்த சிங்கள குடும்பங்களின் குடியேற்றத்திறகு பின்புலமாக இருப்பதாக அங்கு சென்று திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவிக்கிறார்.

சில நாட்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் அந்த பகுதிக்கு நேரில் சென்று மீள்குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் தமது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற பணிகளுக்கு இராணுவம் வழங்கி வரும் உதவிகள் பலமாக அமைவதாக குறிப்பிட்டிருந்தார். மீள்குடியேற அடையாளம் காணப்பட்டவர்களுக்கு அமைச்சர் குணரத்ன வீரக்கோன் மற்றும் துணை அமைச்சர் கருணா உதவிப் பொருட்களை வழங்கியிருந்தனர்.

மீள்குடியேற அடையாளம் காணப்பட்டவர்களுக்கு அமைச்சர் குணரத்ன வீரக்கோன் மற்றும் துணை அமைச்சர் கருணா உதவிப் பொருட்களை வழங்யிருந்தனர்.

வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில் இராணுவம் ஈடபட்டு வரும் நிலையில், அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியேறக் கோருவது நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் புணானையில் ஏற்கனவே வாழ்ந்துவந்த தமிழ்க் குடும்பங்களை மீள்குடியேற்றுவதை விடுத்து சிங்கள மக்களை அங்கு புதிதாக குடியேற்ற முயற்சிகள் நடந்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பொன். செல்வராசா தெரிவிக்கிறார்.

இதனிடையே, புணானையில் மீள்குடியேற்றத்திற்கு திரும்பியுள்ள தமிழ் குடும்பங்களை பிபிசி தமிழோசைக்காக செய்தியாளர் இரா.உதயகுமார் சந்தித்தபோது, தாங்கள் சொந்த கிராமத்திற்கு திரும்பினாலும் தமது காணிகளில் இராணுவ முகாம் அமைந்துள்ளதால், சொந்த காணியில் குடியிருக்கும் வாய்ப்பு தமக்கு கிடைக்கவில்லை என சில தமிழ் குடும்பங்கள் கவலையும் விசனமும் வெளியிட்டன.

மீள்குடியேற்றம் என கூறி தாங்கள் அழைக்கப்பட்டாலும் அங்குள்ள கள நிலவரத்தை அவதானிக்கும்போது, மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கான மறைமுக செயல்பாடுகளே அங்கு தென்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

புனாணையில் பல காலமாக இருந்துவருகின்ற பிள்ளையார் கோயிலின் அருகில் மிக அண்மையில் பௌத்த விகாரை ஒன்று அவசரமாக கட்டப்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மீள்குடியேற்றத்திற்கு தெரிவான குடும்பங்களுக்கு தற்போது காணிகள் அடையாளமிடப்பட்டு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டாலும், இராணுவம் மற்றும் பௌத்த பிக்குகள் தலையீடு காரணமாக பொருத்தமான காணிகளை வழங்குவதில் சிங்கள குடும்பங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக தமிழ்க் குடும்பங்களினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பெருன்பான்மையான தமிழ் குடும்பங்களுடன் ஒரு சில சிங்கள குடும்பங்களும் போருக்கு முன்னர் வாழ்ந்ததாக கூறப்படும் புணானையில் தமிழர்களை விட சிங்களவர்களே கூடுதலாக வாழ்ந்ததாக கூறியே வெளி மாவட்டத்தவர்கள் குடியேற்றப்பட்டு வருவதாகவும் பிபிசி தமிழோசையுடன் பேசிய தமிழ் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் இராணுவத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், ஏன் இப்படியான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது என்பது குறித்தும் இராணுவம் ஆராயும் எனவும் அதன் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அங்கு பல்சமய மக்களும் ஒன்றாக இணக்கப்பாட்டுடன் வாழ்வதற்கான உதவிகளை இராணுவமே முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்

Post a Comment

0 Comments