அக்கரைப்பற்று, பனங்காடு பாலத்திலிருந்து தண்ணீரில் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் தலைக் கவசத்தை எடுப்பதற்காக பாலத்தில் இருந்து குதித்த தம்பியை காப்பாற்ற முயற்சித்த அண்ணனும் தம்பியுமான சகோதரர்கள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். ஆலையடிவேம்பு, நாவற்காட்டு, கோபால்கடை வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஞானசேகரம் ஜனார்த்தன் அவரது சகோதரான 21 வயதுடைய தினேஸ் என அழைக்கப்படும் ஞானசேகரம் ஜெயந்திவாசன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
|
இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
சாகாம வீதியில் உள்ள பனங்காடு பாலத்தில் சம்பவதினமான நேற்று மாலை 6.45 மணியளவில் தீபாவளியையிட்டு பாலத்தில் காற்றுவாங்க சென்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் தலைக்கவசம் பாலத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளது. இதனையடுத்து தம்பியார் பாலத்திலன் மேல் இருந்து கீழே குதித்து தலைக்கவசத்தை எடுக்கமுற்பட்டபோது நீரினில் மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த அண்ணனான ஜனார்த்தன், தம்பியாரை காப்பாற்ற பாலத்தில் இருந்து குதித்துள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ள தம்பியாரை மீனவர்களின் உதவியுடன் மீட்டெடுத்துள்ளார்.
எனினும் தம்பியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தம்பியை காப்பாற்ற பாலத்தில் இருந்து நீரினில் குதித்த அண்ணன் காணாமல்போயுள்ள நிலையில் இரவு ஒரு மணியளவில் சடலமாக பாலத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டார். இச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரது சடலமும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
|
0 Comments