சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த ‘லொரென்சோ புதா 4’ கப்பலின் மீனவர்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்காக சோமாலிய கடற்படையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வி.கண்ணநாதன், எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, சோமாலியாவின் கடற்படைத் தலைவர் அட்மிரல் அப்திவர்சாமி ஒஸ்மானுடன் நெருக்கமாகச் செயற்படுவதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட பல நாள் மீன்பிடி கப்பல் குறித்து விசாரணை நடத்துமாறு பஹ்ரைனில் உள்ள கூட்டு கடல் படைக்கு இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 39 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பஹ்ரைனின் கூட்டு கடல்சார் படை, கடற்படைக் கப்பல்களின் பாதுகாப்பைக் கையாளும் ஒரு அமைப்பாகும்.
கடந்த 12ஆம் திகதி திக்ஓவிட்ட துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ‘லொரென்சோ புதா 4’ என்ற கப்பலை, ஷேல்ஸ் மாகாணத்திற்கு அருகில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை 06 ஆகும்.
0 Comments