Home » » கோயிலில் பிணக்கு : நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்த ஊர் மக்கள்

கோயிலில் பிணக்கு : நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்த ஊர் மக்கள்

 





கோயிலில் பிணக்கு : நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்த ஊர் மக்கள் 

கோயிலில் ஏற்பட்ட பிணக்கொன்றினையடுத்து நீதி கேட்டு நற்பிட்டிமுனை கிராம மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கோயிலொன்றில் கடந்த மாதம் ஏற்பட்ட பிணக்கொன்றினை அடுத்து இரு ஊர் மக்கள் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததுடன், பலரும் காயமடைந்த நிலையில் அப்பகுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இம்மோதல் காரணமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குப்பட்ட நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு என்ற இரு ஊர்கள் பிளவு பட்டதுடன், சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களும் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து, குறித்த கோயிலில் மோதலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து பலர் கைதாகி, சிலர் விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த மோதலில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், கல்முனை பொலிஸாரும் அவர்களைக் கைது செய்வதற்காக  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தவிர, மனித உரிமை ஆணைக்குழுவும் குறித்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இவ்வாறான நிலையில், இக்கோயிலில் ஏற்பட்ட மோதலில் எதிரொலியாக தமக்கு நீதியைப் பெறுவதில்  பாரபட்சம் காட்டப்படுவதாகக்கூறி நற்பிட்டிமுனை  மக்கள் நேற்று (27) நற்பிட்டிமுனைப் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்தில் தஞ்சமடைந்து  கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் மகஜரொன்றினைக் கையளித்துள்ளனர்.

இம்மகஜரில் வருடாவருடம் நடைபெறும் காளி கோயில் சடங்கில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து எங்கள் தரப்பினரும் உள்ளனர். எனினும் இதுவரை அவர்களுக்கான நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை. 

முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டும் பொலிஸ் தரப்பில் எமக்கு தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. எனினும், இதற்கு மாறாக, பொலிஸ் தரப்பினரால் எமது இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் என்பவர் எங்களுக்கு நீதி கிடைப்பதில் தடையாக இருக்கின்றார்.

எனவே, இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை  எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் இவ்விடயம் குறித்த நடவடிக்கை ஏலவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனவே, சமூகப்பிரச்சினைகளை இரு சம்பந்தப்பட்ட தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

பின்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்திற்கு ஊர்வலகமாகச் சென்ற நற்பிட்டிமுனை பொதுமக்கள் ஊடகங்களுக்கும் கருத்துக்களை முன்வைத்தனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |