இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்திற்கொண்டு, மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் பாதுகாப்பையும், உறுதி செய்வதற்கும், மக்களின் வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இன்றைய தினம் கொழும்பு நகரிலும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவு படையினர் தயார் நிலையில்
இந்நிலையில், ஆயுதம் தாங்கிய படையினர், காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியாகியிருந்தது.
பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அதிபரின் செயலாளர் காமினி செனரத் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டால் தாக்குதலுக்கு தயார்
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முற்பட்டால் அவர்களை தடுத்து நிறுத்தவும் கலைந்து செல்லவும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கலகத்தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர்த்தாரை, கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொள்ளும் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
0 Comments