மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் என மக்கள் தற்போது வலியுறுத்திவருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் (M.Velu Kumar) வலியுறுத்தினார்.
எனவே, மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தனது உரையில்,
நாட்டு மக்கள் தற்போது தன்னெழுச்சியாக போராடிவருகின்றனர். இவ்வாறு நடைபெறும் போராட்டங்களின்போது, மக்களிடம் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்த பணம், ஆட்சி கதிரையில் - முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணம் ஆகியவற்றை நாட்டுக்கு கொண்டுவந்து, அரசுடமையாக்க வேண்டும் என கோரிவருகின்றனர்.
எனவே, கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை நாட்டுக்கு கொண்டவர விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும். மக்களின் இந்த கோரிக்கையை அவசர விடயமாக கருதி, அவசர சட்டமூலத்தின் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இந்நாட்டுக்காக தியாகங்களை செய்தவர்களும் உள்ளனர். மக்களுக்கு சேவையாற்றியவர்களும் உள்ளனர். மக்களின் அதிகாரமே மக்கள் பிரதிநிதிகள் ஊடாக நாடாளுமன்றத்துக்கு பகிரப்பட்டுள்ளது.
எனவே, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றப்படவேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு இருக்கின்றது. அவசர சட்டமூலம் கொண்டுவந்தால் அதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவேன்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மக்கள் கூறுவதுபோல பணத்தை கொண்டுவந்தால் சிலவேளை அது இடைக்கால நிவாரணமாகக்கூட அமையலாம். “கோ ஹோம் கோட்டா” என்பதே மக்களின் கோரிக்கை. அதனை அரச தலைவர் ஏற்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 Comments