Home » » புடினின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய நேட்டோ- மும்முனைகளிலும் சுற்றிவளைத்த ரஷ்யா; வீழுமா உக்ரைன்?

புடினின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய நேட்டோ- மும்முனைகளிலும் சுற்றிவளைத்த ரஷ்யா; வீழுமா உக்ரைன்?


 உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்று 30 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ரஷ்ய படைகள் தங்களது தாக்குதலை இடைவிடாமல் நடத்தி வருகின்றன.

உக்ரைன் நாட்டை மூன்று முனைகளில் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துகின்றன. உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. ஆனால் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பெரிய நகரங்களை ரஷ்யா இன்னும் கைப்பற்றவில்லை.

ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினர் கடும் சவால் அளித்து வருகிறார்கள். கீவ் புறநகரில் ரஷ்யா கைப்பற்றிய ஒரு பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இதனால் ரஷ்ய ராணுவம் தங்களது தாக்குதலை கடுமையாக்கி உள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் மீதான போரை எதிர் வரும் மே 9 ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் ஆயுத படைகளின் பொதுப் பணியாளர்களின் உளவுத்துறை கூறும்போது, “மே 9 ஆம் திகதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ரஷ்ய துருப்புகளிடம் கூறப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மே 9 ஆம் திகதி ரஷ்யாவில் ஜெர்மனியின் நாஜி படையை வென்ற நாளாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே உக்ரைன் மக்கள் வலுக்கட்டாயமாக ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் வலுக்கட்டாயமாக ரஷ்யாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பணயக் கைதிகளாக பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் சரண் அடையுமாறு உக்ரைன் மீது அழுத்தம் கொடுக்கலாம்.

84 ஆயிரம் குழந்தைகள் உட்பட 4 லட்சம் பேர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக ரஷ்யாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசியுள்ளார்.

அதன் போது,  நேட்டோ அமைப்பு இது வரை இவ்வளவு ஒற்றுமையாக இருந்ததில்லை. இது ரஷ்ய அதிபர் புடினின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி உள்ளது. உக்ரைனில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால் நேட்டோ படைகள் பதிலடி கொடுக்கும்.

பதிலடியின் தன்மை பயன்பாட்டின் தன்மையை பொறுத்து இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, காணொலி மூலம் பேசும்போது, உக்ரைனுக்கு ஆதரவு அளித்தற்கும், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்கும் இணைந்து பணியாற்றிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் முன்னதாக எடுக்கப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்காக உக்ரைனின் விண்ணப்பத்தை விரைவாக பரிசீலிக்க வேண்டும். இதில் தாமதிக்க வேண்டாம். எங்களுக்கு இது ஒரு வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |