பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என அனைத்து இன மக்களும் வலியுறுத்திவருகின்றனர். ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடுகின்றனர். எனவே, இச்சட்டத்தை அரசு முற்றாக நீக்க வேண்டும் என
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா நகரில் இன்றையதினம் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
பயங்கரவாத தடைச்சட்டமானது 40 ஆண்டுகாலமாக தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவந்தது. இடையிடையே சிங்கள இளைஞர்கள் தண்டிக்கப்பட்டனர்.
தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிக மோசமாக இச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்குவதற்கும் இந்தச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாகும். இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் இதனையே வலியுறுத்துகின்றனர்.
எனவே, இது மக்கள் கோரிக்கையாகும். அதனை அரசு நிறைவேற்ற வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 Comments